காற்றழுத்த தாழ்வு நிலை...தூத்துக்குடியில் நள்ளிரவில் கனமழை
தூத்துக்குடி: தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நள்ளிரவில் கனமழை பெய்தது.
வங்கக் கடலில் குமரிக்கு அருகே நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை வலுவிழந்து விட்டதாக சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது. இதுதொடர்பாக வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், வங்கக் கடலில் குமரிக்கு அருகே நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை வலுவிழந்து விட்டது.

இதன் காரணமாக வரும் 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மழை ஓயும். கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடியில் மட்டும் ஒரு சில இடங்களில் மழை பெய்யலாம். கிழக்கிலிருந்து வரும் காற்றின் வேக மாறுபாடு காரணமாக இங்கு மழைக்கு வாய்ப்புள்ளது. இவை தவிர்த்த பிற தமிழகப் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பில்லை. கன மழைக்கும் வாய்ப்பில்லை.
சென்னையில் வானம் மேகமூட்டமாக இருக்கும். சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புண்டு என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தூத்துகுடியில் நள்ளிரவில் கனமழை பெய்தது. முத்தையாபுரம், புதுக்கோட்டை, திரேஸ்புரம், பிரையண்ட் நகர், சிதம்பர நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. தொடர் மழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்,கடலூர் மாவட்டங்கள் சின்னாபின்னமாகின. தற்போது அந்த பகுதிகளில் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது.












Click it and Unblock the Notifications