For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொட்டித்தீர்த்த கோடைமழை... 3 பேர் பலி: குற்றால வெள்ளநீரில் மாயமான சிறுமி கதி என்ன?

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகம் முழுவதும் நேற்று கொட்டிய கோடை மழையில் இடி, மின்னல் தாக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் பிரதான அருவியில் குளித்துக்கொண்டிருந்த சிறுமி அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாயமான சிறுமியை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கோடை காலம் துவங்கிய முதலே வெயில் வெளுத்து வாங்கினாலும் அதற்கு சமமாக தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. செவ்வாய்க்கிழமை அதிகாலையில் தென்காசி, குற்றாலம் பகுதியில் பலத்த மழை பெய்தது. செங்கோட்டை அருகே உள்ள பண்பொழியில் கோயில் விழா நடைபெறுவதை முன்னிட்டு, அந்த ஊரில் இருந்து ஒரு வேனில் ஏராளமானோர் பேரருவியில் குளிக்க சென்றிருந்தனர்.

குற்றாலத்தில் வெள்ளம்

குற்றாலத்தில் வெள்ளம்

பேரருவியில் மாலை 6.30 மணி அளவில், அனைவரும் குளித்துக் கொண்டிருந்தபோது, திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. உடனே, அனைவரும் அருவியைவிட்டு வெளியேறினர். அதில், பண்பொழி சத்தியவாணிமுத்து நகர் பகுதியைச் சேர்ந்த முருகன் மகள் துர்கா (13) என்ற சிறுமியை மட்டும் காணவில்லை.

வெள்ளநீரில் மாயமான சிறுமி

வெள்ளநீரில் மாயமான சிறுமி

அந்தச் சிறுமி தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதையடுத்து, சிறுமியைத் தேடும் பணியில் குற்றாலம் போலீசாரும், தென்காசி தீயணைப்பு-மீட்புப் படையினரும் விடிய விடிய ஈடுபட்டனர். ஆனாலும் சிறுமி கிடைக்கவில்லை. இன்றும் சிறுமியை தேடும் பணி தொடர்கிறது. மகளைக் காணாத பெற்றோர் கண்ணீர் மல்க அருவிக்கரையில் காத்திருக்கின்றனர்.

வேலூரில் கனமழை

வேலூரில் கனமழை

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மாலை திடீரென கரும்மேகங்கள் சூழ்ந்து பலத்த சூறைகாற்றுடன் இடியுடன் கூடிய கோடை மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் பெருகி ஓடியது. இந்நிலையில் பலத்த காற்று காரணமாக பல இடங்களில் மரங்கள் சாய்ந்தது. சுவர்களும் இடிந்து சேதமடைந்தன. இதனால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகினர்.

மின்னலுக்கு 3 பேர் பலி

மின்னலுக்கு 3 பேர் பலி

அரக்கோணம் அருகே பெரிய ஈசலாபுரத்தை சேர்ந்த விஜயன் (36), நேற்று மாடு மேய்த்தபோது மின்னல் தாக்கி இறந்தார். திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று மதியம் சுமார் 1 மணி நேரம் பலத்த மழை பெய்தது. கீழ்பென்னாத்தூரை அடுத்த வேடநத்தம் கிராமத்தை சேர்ந்த உஷா (42) மின்னல் தாக்கி இறந்தார்.

நெல்லை மாவட்டம் மூலக்கரைப்பட்டியை அடுத்த ஆலம்பூண்டார்குளம் கிராமத்தை சேர்ந்த விவசாயி பூல்பாண்டி (52) மின்னல் தாக்கி பலியானார்.

பசுமாடு பலி

பசுமாடு பலி

தஞ்சாவூரில் நேற்றும் மதியம் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. கோடை நெல் சாகுபடிக்கு இந்த மழை ஏற்றதாக இருந்தது. ஈரோட்டில் நேற்று மாலை சுமார் 15 நிமிடம் கடுமையான மழை கொட்டியது. மதுரை மாவட்டம் ஆண்டிபட்டி, விரகனூர் பகுதிகளில் நேற்று முன்தினம் மழை பெய்தது. நேற்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மழை பெய்யவில்லை. சிவகங்கை மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. பொன்குண்டுபட்டி கிராமத்தில் பசு மாடு ஒன்று மின்னல் தாக்கி இறந்தது.

சூறாவளியுடன் மழை

சூறாவளியுடன் மழை

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நேற்று பிற்பகல் தொடங்கி 4 மணி நேரம் இடைவிடாமல் மழை கொட்டியது. சில பகுதிகளில் வீடு-கடைகளுக்குள் வெள்ளம் புகுந்தது. பொள்ளாச்சி, ஆனைமலை, வால்பாறை பகுதிகளில் நேற்று மாலை சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டியது.

2 நாட்களுக்கு மழை

2 நாட்களுக்கு மழை

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவானதன் காரணமாக கடந்த சில தினங்களாக தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கொங்கன் முதல் விதர்பா வரையிலும் லட்சத்தீவிலும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்னும் 48 மணி நேரத்தில் பல இடங்களில் லேசானது முதல் கனமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

English summary
Waterfalls at Courtallam in the Nellai district experienced flood on Tuesday, following incessant rain in the Western Ghats.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X