காற்றழுத்த தாழ்வுநிலை...கடலோர பகுதிகளில் 2 நாட்களுக்கு கனமழை- வானிலை மையம்
குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை தமிழக கடலோர பகுதிகளில் நீடிப்பதால் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னை: கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். சென்னையில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் இலங்கைக்கு அருகே நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழக கடலோர பகுதிகளில் நிலவுவதாக கூறினார்.
இதன் காரணமாக இன்னும் இரு தினங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறினார். காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெறுவதற்கு வாய்ப்பு இல்லை. 24 மணிநேரத்தை பொறுத்தவரை வட கடலோர மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறினார்.
சென்னையில் நேற்று மாலை தொடங்கி விடிய விடிய கொட்டித் தீர்த்தது மழை. காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது தமிழக கடலோர பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலையாக நீடிக்கிறது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட வடக்கு தமிழக கடலோர பகுதிகளில் மிக மழை முதல் அதிக கனமழை பெய்யும் என்று கூறியுள்ளார் பாலச்சந்திரன்.