விடுமுறை முடிந்து ஒரே நேரத்தில் சென்னையில் குவியும் மக்கள்.. இந்த பக்கம் போகாதீங்க! டிராபிக் ஜாம்
செங்கல்பட்டு: அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பல்வேறு ஊர்களில் இருந்து சென்னைக்கு மக்கள் திரும்புவதால் சிங்கப்பெருமாள் கோயில் அருகே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு அரையாண்டுத் தேர்வுகள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 22 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து 23 ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை விடப்பட்டது.

இந்த நிலையில் நேற்றுடன் அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்தது. இன்று முதல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை முடிந்து சென்னைக்கு திரும்பி கொண்டிருக்கிறார்கள். ஒரே நேரத்தில் பொதுமக்கள் விடுமுறை முடிந்து நேற்று இரவு முதல் சென்னை திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.
இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டை அடுத்த சிங்கபெருமாள் கோவில் அருகே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சுமார் 3 கி.மீ. தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. தொடர்ந்து மறைமலை நகர், கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம் ஆகிய பகுதிகளிலும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் புத்தாண்டு கொண்டாட்டங்களை முடித்துக் கொண்டு கிழக்கு கடற்கரை சாலைகளில் அக்கரை பகுதி வழியாக பொதுமக்கள் வந்து கொண்டிருப்பதாலும் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அது போல் நேற்று புத்தாண்டு கொண்டாட மெரினா கடற்கரைக்கு குவிந்ததாலும் காமராஜர் சாலையில் வாகனங்கள் ஆமை போல் ஊர்ந்து வருகின்றன.












Click it and Unblock the Notifications