சென்னைக்கு வரும் வாகனங்களுக்கு வழியில்லை… செங்கல்பட்டு அருகே கடும் நெரிசல்
செங்கல்பட்டு: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தென்மாவட்டங்களில் இருந்து சென்னை திரும்பிய வாகனங்கள் கடும் நெரிசலில் சிக்கின. இதனால் குறித்த நேரத்தில் சென்னைக்குள் வர முடியாமல் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகினர்.
பொங்கல் முடிந்த நிலையில், தங்களின் சொந்த ஊரான தென்மாவட்டங்களுக்கு சென்றவர்கள் மீண்டும் சென்னைக்கு பேருந்துகள் கிடைக்காமல் அவதியுற்றனர்.
பொங்கல் பண்டிகையை கொண்டாடிய சிலர் விடுமுறை முடிந்த உடன் அடித்து பிடித்து சிறப்பு பேருந்தில் இடம் பிடித்து சென்னை திரும்பினர்.

பேருந்து ஏறினாலும் வழிநெடுகிலும் போக்குவரத்து நெரிசல் காரணமாக ஒவ்வொரு டோல்கேட்டிலும் சுமார் 3 கி.மீ. தொலைவிற்கு பேருந்துகள் நெரிசலில் தேங்கி நின்றன. இதனால் உரிய நேரத்தில் சென்னைக்கு திரும்ப முடியாமல் பொதுமக்கள் சிக்கித் தவிக்கின்றனர்.
இன்று காலை, சாலை போக்குவரத்து விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கால்நடைத்துறை அமைச்சர் சின்னையா மற்றும் எம்.எல்.ஏக்கள் செங்கல்பட்டு டோல் கேட் பகுதியில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வாகன ஓட்டிகளுக்கு கொடுத்தனர்.
அப்போது அதிக அளவில் மாணவர்களை ஏற்றிச் சென்ற பள்ளி வாகனங்கள், அதிக சுமை, சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டியது போன்ற காரணங்களுக்காக சில வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
அதே நேரத்தில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த வாகனங்கள் நெரிசலுக்குள்ளானதை அமைச்சர்கள் கண்டுகொள்ளாமல், ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் பணிக்காக அவசர அவசரமாக விரைந்தனர்.
பேருந்து கிடைத்தும் குறித்த நேரத்திற்குள் ஆபிஸ் போக முடியலையே என்று பலரும் நொந்து கொண்டனர்












Click it and Unblock the Notifications