திருவிலஞ்சி குமார கோவிலில் குட்டி யானைக்கு கொடுமைகள் – பக்தர்கள் கொதிப்பு
தென்காசி: தென்காசி திருவிலஞ்சி குமார கோவிலில் கொடுமைக்கு உள்ளாகும் குட்டி யானைகளை கண்டு பொதுமக்கள் கொதித்துப் போயுள்ளனர்.
தென்காசியிலிருந்து செங்கோட்டை செல்லும் பாதையில் உள்ள திருக்குற்றாலம் அருகில் திருவிலஞ்சி குமார கோவில் உள்ளது.இந்த ஆலயம் இரண்டாயிரம் வருடங்களுக்கு மேல் பழமையான கோவில் திருவிலஞ்சி குமார கோவில் ஆகும்.
இந்த ஆலயத்திற்கு ஒரு ஆண் யானை,ஒரு பெண் யானை என இரண்டு குட்டி யானைகள் அன்பளிப்பாக முக்கிய வி.ஐ.பியால் வழங்கப்பட்டது.வழங்கப்பட்ட கொஞ்ச நாளிலேயே ஆண்யானை நோய் வாய் பட்டு பரிதாபமாக பலியானது.
அதனைத்தொடர்ந்து பெண் யானை வள்ளி மட்டும் குற்றாலம் வரும் சுற்றுலாப் பயணிகள்மற்றும் ஆலயத்திற்கு வரும் பக்தர்களை மகிழ்வித்து வருகிறது.
வரும் டிசம்பர் மாதம் தமிழகத்திலுள்ள யானைகள் அனைத்தும் முதுமலையில் நடைபெற உள்ள கோவில் யானைகள் புத்துணர்வு முகாமில் பங்கேற்பதற்காக செல்லவுள்ள நிலையில் குமரன் கோவில் யானையான வள்ளியும் அங்கு செல்வதுண்டு.
இந்நிலையில் யானையின் எடையை அறிய நேற்றுமுன் தினம் பிரானூர் பார்டர் பகுதியிலுள்ள தனியார் எடை நிலையத்திற்கு யானையை பராமரிக்கும் நபர்களால் அழைத்துவரப்பட்டது.
அப்போது குட்டி யானை முரண்டு பிடிக்கவே அதனை யானையை பராமரிக்கும் பணியாளர்கள் கடுமையான முறையில் கம்பால் தாக்கினர்.யானை அடிதாங்கமுடியாமல் பிளிறியது.
அதை பொருட்படுத்தாமல் யானையை தங்களது கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவர கடுமையாக பணியாளர்கள் நடந்துக் கொண்ட சம்பவம் பொதுமக்கள்,பக்தர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.