முக்கியமான 'அந்த நாட்கள்'... வித்யாசாகர் ராவின் புத்தகத்தில் உள்ளது இதுதானாம்!
தமிழக பொறுப்பு ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவ் தனது பதவிக் காலத்தில் கிடைத்த அனுபவத்தை முக்கியமான அந்த நாட்கள் என்ற தலைப்பில் புத்தகமாக எழுதியுள்ளார்.
சென்னை : தமிழக பொறுப்பு ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவ் தனது பதவிக் காலத்தில் கிடைத்த அனுபவத்தை முக்கியமான அந்த நாட்கள் என்ற தலைப்பில் புத்தகமாக எழுதியுள்ளார். அதில் இடம் பெற்றுள்ள அம்சங்கள் என்ன என்பதைப் பார்க்கலாம்.
தமிழகத்தில் ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு அரசியலில் ஒரு அசாதாரண சூழல் ஏற்பட்டது. இந்த காலகட்டத்தில் ஆளுநர் விரைந்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. மத்திய அரசு நிரந்த ஆளுநரை தமிழகத்திற்கு நியமிக்காததும் அசாதாரண சூழலுக்கு காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டது.
இந்நிலையில் தமிழகத்திற்கு ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டு, அவரும் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். இந்நிலையில் பொறுப்பு ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவ் தனது பதவிக் காலத்தில் கிடைத்த அனுபவத்தை முக்கியமான அந்த நாட்கள் என்ற தலைப்பில் புத்தகமாக எழுதியுள்ளார்.
முதல் அத்தியாயம்
அந்த புத்தகத்தை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு நேற்று வெளியிட்டார். இந்த புத்தகத்தில் 12 அத்தியாயங்களாக தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார் வித்யாசாகர் ராவ். முதல் அத்தியாயத்தில் ஜெயலலிதாவை தன்னை விமான நிலையத்திற்கு வந்து வரவேற்றது. ஜெயலலிதா முன்னிலையில் வித்யாசாகர் ராவ் பொறுப்பேற்றது ஜெ. உடனான நட்பு உள்ளிட்டவற்றை அவர் விவரித்துள்ளார்.
ஜெ. மருத்துவமனையில்
இரண்டாவது அத்தியாயத்தில் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அதிர்ச்சியான சூழல், நம்பமுடியாத நிலை மற்றும் அதனைத் தொடர்ந்து தான் மருத்துவமனை சென்றது. அப்பலோ மருத்துவர்கள் தொடர்ந்து ஜெ.வின் உடல்நிலை குறித்து தகவல் சொன்னது உள்ளிட்டவற்றை பற்றி எழுதியுள்ளார். அடுத்த அத்தியாயத்தில் ஜெயலலிதாவின் மரணம், அப்போதும் கூட அமைதி காத்த மக்கள், நள்ளிரவில் ஓ.பன்னீர்செல்வம் அமைச்சரவை பதவியேற்றது குறித்து விவரித்துள்ளார்.
வர்தா பாதிப்பு
வர்தா புயலில் இருந்து மீள எடுக்கப்பட்ட நடவடிக்கைகள். அந்த சமயத்தில் வேறோடு விழுந்த மரங்களுக்கு 'ஒரு மாணவர், ஒரு மரம்' என்ற திட்டம் மூலம் மரம் நடுதலை கொண்டு வந்தது உள்ளிட்டவற்றை கூறியுள்ளார். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது அமைதியாக போராடிய மக்கள் குறித்தும் தனது புத்தகத்தில் குறிப்பிட வித்யாசாகர் ராவ் மறக்கவில்லை.
|
சசி உரிமை கோரிய போது
சட்டத்தை நிலைநிறுத்தியது என்று ஆறாவது அத்தியாயத்தில் சசிகலா ஆட்சி அமைக்க உரிமை கோரிய போது நிலைமையை கையாண்ட விதத்தையும் வித்யாசாகர் விவரித்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்த உடன் ஏற்பட்ட அந்த நெருக்கடி நிலையிலும் தான் அரசியல் சாசனப்படி செயல்பட்டதாக அவர் கூறியுள்ளார். உயர்கல்வியை மேம்படுத்த துணைவேந்தர்கள் நேர்காணலைத் தானே நடத்தியது, அமைச்சர்கள், முதல்வர்களுடனான திடீர் திடீர் சந்திப்புகள், ஆலோசனைகள் அனைத்தையும் வித்யாசாகர் ராவ் இந்த புத்தகத்தில் எழுதியுள்ளார்.