இனி காங்கிரஸ் மட்டுமல்ல, இன்னொரு சாய்ஸும் திமுகவுக்கு கைவசம் கிடைச்சிருக்கு!
2ஜி வழக்கின் தீர்ப்பு திமுகவிற்கு சாதகமாக வந்துள்ளதால் திமுகவின் கூட்டணி சாய்ஸ் இனி வரும் தேர்தல்களில் மாறுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.
Recommended Video
சென்னை : 2ஜி வழக்கு காரணமாக கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டது. இந்நிலையில் 2ஜி வழக்கின் தீர்ப்பு திமுகவிற்கு சாதகமாக வந்துள்ளதால் திமுகவின் கூட்டணி சாய்ஸ் இனி வரும் தேர்தல்களில் மாறுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தாலும் சரி, சட்டமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி திமுக, காங்கிரஸ் கட்சிக்கு திரும்பிய இடமெல்லாம் அடியை ஏற்படுத்திய விவகாரம் 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கு. வாக்காளர்களிடம் இதன் தாக்கம் நேரடி பாதிப்பை ஏற்படுத்தாவிட்டாலும், எதிர்க்கட்சிகள் திரும்பத் திரும்ப கூறி நாட்டிற்கு பல கோடி இழப்பு ஏற்பட்டிருக்குமோ, திமுக காங்கிரஸ் கட்சியினர் ஆதாயம் அடைந்திருப்பார்களோ என்று பல கோணங்களில் மக்கள் யோசிக்கத் தொடங்கினர்.
இதனால் 2014 நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 2016 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியை விட்டு விலக முடியாத நிலை திமுகவிற்கு ஏற்பட்டது. இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள 2ஜி வழக்கின் தீர்ப்பானது பழமைவாய்ந்த திராவிட முன்னேற்றக் கழகத்திற்கான எதிர்கால கூட்டணி அரசியலை மாற்றிப் போடும் என்று தெரிகிறது.
முற்றுப்புள்ளி
2ஜி வழக்கு என்பது கட்சியையே அழித்து விடும் அணுகுண்டாக இருந்து வந்தது. டெல்லியில் திமுகவை இந்த ஒரே வழக்கை காரணம் காட்டி பலரும் கட்சியினர் மற்றும் திமுகவிற்கு அவப்பெயரை ஏற்படுத்தினர். இவைகளுக்கெல்லாம் சட்ட ரீதியில் ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது என்றே திமுகவினர் கருதுகின்றனர்.
காங்கிரஸை அனுசரித்து போக வேண்டியதில்லை
திமுகவிற்கு அச்சுறுத்தலாக இருந்து வந்த 2ஜி வழக்கின் தீர்ப்பு மூலம் இனி அந்தக் கட்சி எந்தக் கட்சியுடனும் கராரான கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஏன் இனி காங்கிரஸ் கட்சியை அண்டி அனுசரித்து செல்ல வேண்டிய கட்டாயமும் காங்கிரஸ் கட்சிக்கு இல்லை.
உருவாகலாம் புதுக்கூட்டணி
அண்மையில் சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்துவிட்டுப் போன போதே கூட்டணி பற்றிய பேச்சுகள் அடிபட்டன. இந்நிலையில் இனி திமுகவிற்கு காங்கிரஸ் உடன் மட்டுமல்ல மற்றொரு கட்சியான பாஜகவுடனும் கூட்டணிக்கு வாய்ப்பு இருப்பதாகவே பார்க்கப்படுகிறது.
எது வேண்டுமானாலும் நடக்கலாம்
எனினும் 2014 தேர்தலில் காங்கிரஸ் கட்சி வீழ்வதற்கு மிகப்பெரும் காரணமாக இருந்தது 2ஜி வழக்கு. இதை முன் வைத்தே திமுகவையும் பாஜகவினர் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த கூட்டணி சாத்தியப்படுமா என்ற கேள்வியும் எழுகிறது. அரசியல் அரங்கில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.