மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்... சென்னை விமான நிலையத்திற்கு கூடுதல் பாதுகாப்பு
சென்னை: கடந்த திங்களைத் தொடர்ந்து இன்று மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் சென்னை விமான நிலையத்தின் பாதுகாப்பை போலீசார் மேலும் அதிகப்படுத்தியுள்ளனர்.
சுதந்திரதினத்தை முன்னிட்டு இந்தியாவின் முக்கிய விமான நிலையங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 25ம் தேதி சென்னை விமான நிலையத்திற்கு டெலிபோன் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
உடனடியாக விமான நிலையத்தின் பாதுகாப்பை பலப்படுத்திய போலீசார், மேற்கொண்டு நடத்திய விசாரணையில் மிரட்டல் போன் நாகப்பட்டினத்தில் இருந்து வந்தது ண்டு பிடிக்கப்பட்டது.
இதையடுத்து விமான நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் மகிமை வீரன் தலைமையில் தனிப்படை போலீசார் 2 நாட்களாக நாகப்பட்டினத்தில் முகாமிட்டு மிரட்டல் விடுத்தது யார் என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், இன்று மீண்டும் சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. வெடிகுண்டு மூலம் விமான நிலையம் தகர்க்கப் படும் என டெலிபோன் மூலமாக மர்ம ஆசாமி ஒருவன் மிரட்டல் விடுத்துள்ளான்.
இந்த மர்ம போனைத் தொடர்ந்து சென்னை விமான நிலையத்தின் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்குப் பின்னரே உள்ளே அனுமதிக்கப் படுகின்றன.
விமான நிலையத்தின் நுழைவுப்பகுதி முதல் உள்பகுதி வரை 20 இடங்களில் சந்தேகத்திற்கிடமான வகையில் யாரும் நடமாடுகிறார்களா என மத்திய பாதுகாப்புப் படை போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இரண்டு தினங்களில் சென்னை விமான நிலையத்துக்கு 2-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து போலீசாரும் அதிகாரிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மிரட்டல் விடுக்கும் மர்ம நபரை பிடிக்கும் முயற்சிகளை தீவிரமான மேற்கொண்டு வருகின்றனர்.