எடப்பாடி பழனிச்சாமி மீது ஊழல் வழக்கு.. அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்பு துறைக்கு ஹைகோர்ட் உத்தரவு
Recommended Video
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான ஊழல் வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி செப்டம்பர் 3ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உறவினர் பங்குதாரராக உள்ள நிறுவனத்திற்கு, நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளது. திட்ட மதிப்பை விட கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்த வகையில் ரூ.3120 கோடி ஊழல் நடைபெற்றுள்ளது, என்பது திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு. இது தொடர்பாக, ஜூன் 13ம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனரிடம் ஆர்.எஸ்.பாரதி, புகார் மனு அளித்திருந்தார்.
ஆனால், இதுவரை விசாரணை துவங்கப்படவில்லை என்றும், உடனடியாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த வேண்டும் என்றும், ஆர்.எஸ்.பாரதி ஹைகோர்ட்டில் நேற்று வழக்கு தொடர்ந்தார்.
தாராபுரம்-அவிநாசி-ஒட்டன்சத்திரம் சாலை 700 கோடி மதிப்பிலானது. ஆனால், 1,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலி-செங்கோட்டை-கொல்லம் நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்கு இரு மடங்கு தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது போன்ற குற்றச்சாட்டுகள் மனுவில் இடம் பெற்றுள்ளன.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வாதிட்டார்.
நெடுஞ்சாலைத்துறை முறைகேடுகள் குறித்து, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி எம்.பி, ஜூன் மாதம் 13ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனரிடம் புகார் மனு அளித்திருந்தார். ஆனால் புகார் மனு மீது எந்த விசாரணையும் நடைபெறவில்லை.
தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு துறை பதிவேட்டின்படி, புகார் அளித்த 2 மாத காலத்திற்குள் முதல் கட்ட விசாரணையை நடத்தி முடித்து இருக்க வேண்டும். இதேபோல லலிதாகுமாரி வழக்கில், உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள வழிகாட்டுதலின்படி, புகார் அளித்த ஏழு நாட்களுக்குள் முதல்கட்ட விசாரணையை முடித்திருக்க வேண்டும். ஆனால் இந்த இரண்டில் எந்த ஒரு வழிகாட்டுதலையும் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை கருத்தில் எடுக்கவில்லை. விசாரணையை முடிக்கவில்லை என்று வாதிட்டார்.
அரசு தரப்பு வழக்கறிஞரோ, ஜூன் 22ம் தேதியே லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை தொடங்கிவிட்டது என்று தெரிவித்தார்.
இதைக் கேட்ட நீதிபதி, இரு மாதங்களாகியும் முதல்கட்ட விசாரணை முடியவில்லையா என்று கேள்வி எழுப்பினார். மேலும், மனு மீது
என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து, செப்டம்பர் 3ல் லஞ்ச ஒழிப்பு துறை பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதனால் முதல்வருக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.