அரசு ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய முன் அனுமதி அவசியம்: உயர் நீதிமன்றம்
சென்னை: ஊழல் புகாருக்கு உள்ளாகும் அரசு ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய முன் அனுமதி அவசியம் என்ற அரசாணையை எதிர்த்து தாக்கல் செய்த மனு குறித்து பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழகத்தில் பணியாற்றும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் மீது ஊழல் புகார் வந்தால், அந்த புகார் மீது வழக்குப்பதிவு செய்வதற்கு முன்னதாக தமிழக லஞ்ச ஒழிப்பு ஆணையத்திடம் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் அனுமதி பெறவேண்டும் என்று கடந்த 1988-ம் ஆண்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.
இதனை எதிர்த்து வழக்கறிஞர் புகழேந்தி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில், தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், அரசு ஊழியர்கள், பதவி வேறுபாடு இல்லாமல், யார் மீது ஊழல் புகார் வந்தாலும், அந்த புகார் மீது வழக்குப்பதிவு செய்ய அரசிடம் முன் அனுமதி பெறவேண்டும் என்று பிப்ரவரி 2-ம்தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த அரசாணையை எதிர்த்து, வழக்கறிஞர் புகழேந்தி தாக்கல் செய்த மற்றொரு மனுவில், பிப்ரவரி 2-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட அரசாணையை சட்டவிரோதமானது என்றும், இந்த அரசாணையை ரத்து செய்யவேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இந்த மனுவை செவ்வாய்க்கிழமை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர், மனு குறித்து 4 வாரங்களில் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜூன் 13-க்கு ஒத்திவைத்தனர்.