தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் புராதன- வரலாற்று நாடக விழா!
சென்னை: தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் புராதன நாடகக் கலைவிழா சென்னையில் நேற்று தொடங்கியது.
இதுகுறித்து தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ் நாடகங்களுக்குப் புத்துயிர் அளிக்கும் வண்ணம் வரலாறு மற்றும் புராண நாடங்கள் தயாரித்து மேடையேற்றம் செய்ய மாண்புமிகு மக்களின் முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்களால் சட்டப் பேரவையில் அறிவிப்பு செய்யப்பட்டு, நாடகம் ஒன்றுக்கு ரூபாய் 1.50 லட்சம் வீதம் 5 நாடகங்களுக்கு ரூபாய் 7.50 லட்சம் தொகையை தாயுள்ளத்தோடு, நாடகக் கலையையும், கலைஞர்களையும் ஊக்குவிக்கும் வண்ணம் வழங்கி இருக்கிறார்கள்.
அவ்வகையில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், நாரத கான சபா ட்ரஸ்ட் நிறுவனத்துடன் இணைந்து மார்ச் மாதம் 8ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை தினசரி மாலை 6.30 மணியளவில், டி.டி.கே சாலையில் உள்ள சத்குரு ஞானாநந்தா ஹாலில் புராண நாடக விழா நடக்கிறது.
இவ்விழாவின் முதல் நாடகமாக 08.03.2015 டி.பாலசுந்தரம் அவர்களின் தமிழரசன் தியேட்டர்ஸ் வழங்கிய ஸ்ரீ கிருஷ்ண தரிசனம் என்னும் புராண நாடகம் நடைபெற்றது.
இதை தொடர்ந்து 09.03.2015 அன்று மதுரை தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் வழங்கும் பக்தப்பிரகலாதா, 10.03.2015 அன்று கே.ஆர்.எஸ்.குமார் அவர்களின் நாடகக் காவலர் கலைக்கூடம் வழங்கும் அவதார புருஷர் ஸ்ரீ ராமானுஜர், 11.03.2015 அன்று சான் பாஷா அவர்களின் தேவி கலைக்கூடம் வழங்கும் காரைக்கால் அம்மையார், 12.03.2015 அன்று நாடகப் பணி அருணகிரி அவர்களின் கங்கை கலாலயா வழங்கும் கிள்ளிவளவன் காதல் ஆகிய புராண நாடகங்கள் மேடையேற்றம் செய்யப்பட உள்ளது.
அனைவரும் இலவசமாக கண்டுகளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்விழாவினை தமிழ் நாடு இயல் இசை நாடக மன்ற தலைவர் திரு.தேவா, உறுப்பினர் செயலாளர் சித்ரா விஷ்வேஸ்வரன் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளனர்.
-இவ்வாறு அந்த குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.