பொங்கி வழியும் ஒகேனக்கல் அருவி...சுற்றுலா பயணிகள் எல்லையில்லா மகிழ்ச்சி - வீடியோ
ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் அதிக அளவு நீர்வரத்து இருப்பதால் சுற்றுலா பயணிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தர்மபுரி: ஒகேனக்கல் அருவியில் நீர்வரத்து அதிகமாக இருப்பதால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வதால் இங்கு நீர்வரத்து அதிகமாக உள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 140 வருடங்களில் இல்லாத அளவுக்கு கடும் வறட்சி ஏற்பட்டது. இதனால் விவசாயப் பயிர்கள் கருகி நாசமான வேதனையில் விவசாயிகள் பலர் உயிரிழந்தனர். மேலும் பலர் தற்கொலை செய்துகொண்டனர்.
இந்நிலையில் தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து கோடை வெப்பத்தைத் தணித்து வருகிறது. சில இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும் பெய்து வருகிறது. கிருஷ்ணகிரியை சுற்றியுள்ள பகுதிகளிலும் காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளிலும் சில நாட்களாக நல்ல மழை பெய்து வருவதால் ஒகேனக்கல் அருவியில் நீர்வரத்து அதிகமாக உள்ளது.
இதனால் கோடை விடுமுறையை கழிக்க ஒகேனக்கல் வரும் சுற்றுலா பயணிகளுக்கும் பொதுமக்களுக்கும் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு பருவ மழை முன்கூட்டியே பெய்யும். சரியான அளவில் பெய்யும் என்று வானிலை மையம் கூறியிருப்பது அனைவருக்கும் ஆறுதல் அளிக்கும் செய்தியாக உள்ளது.