Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரூர் (தனி) பெட்டியை திறந்ததுமே.. தலைகீழாக திரும்பிய ரிசல்ட்! சவுமியா தோற்க காரணமே இதுதான்!

Subscribe to Oneindia Tamil

தருமபுரி: தருமபுரியில் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி பல சுற்றுகள் முன்னிலை வகித்து வந்த நிலையில், கடைசி சில சுற்றுகள் ஆட்டத்தையே தலைகீழாக திருப்பிப் போட்டுவிட்டன. அதற்குக் காரணம் அரூர் (தனி) தொகுதி.

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19 முதல் 7 கட்டங்களாக நடைபெற்று கடந்த ஜூன் 1 ஆம் தேதியுடன் நிறைவுற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி அபார வெற்றி பெற்றது.

lok sabha election 2024 sowmiya anbumani dharmapuri 2024

தருமபுரி - இழுபறி: தருமபுரி லோக்சபா தொகுதியில் இறுதி வரை கடுமையான போட்டி நிலவியது. தருமபுரி தொகுதியில் திமுக வேட்பாளர் ஆ. மணிக்கும், சௌமியா அன்புமணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி வேறு எங்குமே முன்னிலை பெறாத நிலையில், ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே முன்னிலையுடன் தொடர்ந்து வந்தது.

தருமபுரி மக்களவைத் தொகுதியில் சௌமியா அன்புமணி, ஆ.மணி இருவரும் இழுபறியைச் சந்தித்து வந்தனர். பின்னர் சில சுற்றுகளில் சௌமியா அன்புமணி தொடர்ந்து முன்னிலை வகித்து 20 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் ஆ.மணியை பின்னுக்குத் தள்ளி முன்னிலை பெற்றார்.

சௌமியா தோல்வி: ஆனால், கடைசி நேரத்தில் சௌமியா அன்புமணி சரிவைச் சந்தித்து, வாக்கு எண்ணிக்கை முடிவில் 21 ஆயிரத்து 300 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். கடந்த 2019 லோக்சபா தேர்தலில் தருமபுரி தொகுதியில் அன்புமணி தோல்வியுற்ற நிலையில் இந்த தேர்தலில் அவரது மனைவி சௌமியா தோல்வி அடைந்தார்.

கடும் போட்டி கொடுத்து வந்த சௌமியா இறுதியில் தோல்வியடையக் காரணமே, அரூர் சட்டசபை தொகுதி தான். தருமபுரி லோக்சபா தொகுதியில் வன்னியர் சமூக மக்கள் அதிகம் வசிக்கும் நிலையில், அங்கு பாமக வாக்கு வங்கி வலுவாக உள்ளது. அதையொட்டியே சௌமியா அன்புமணி அங்கு களமிறங்கினார்.

பாமக முன்னிலை: எதிர்பார்த்தபடியே, தருமபுரியில் முன்னிலை பெற்று வந்தார் சௌமியா அன்புமணி. தருமபுரி லோக்சபா தொகுதிக்குட்பட்ட சட்டசபை தொகுதிகளான பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் (தனி), மேட்டூர் என வரிசையாக வாக்கு இயந்திரங்கள் எண்ணப்பட்டு வந்தன.

பாலக்கோடு சட்டசபை தொகுதியில் திமுக வேட்பாளர் மணி 71 ஆயிரத்து 344 வாக்குகளை பெற்றிருந்தார். பாமகவின் சௌமியா 60 ஆயிரத்து 878 வாக்குகளை கைப்பற்றினார். அடுத்ததாக பெண்ணாகரம் தொகுதியில் 64 ஆயிரத்து 581 வாக்குகளை திமுக பெற்றிருந்தது. பாமகவோ 76 ஆயிரத்து 166 வாக்குகளை கைப்பற்றி முன்னிலைக்கு வந்தது.

தொடர்ந்து முன்னிலை வகித்த சௌமியா: அடுத்ததாக, தருமபுரி சட்டசபை தொகுதி வாக்குகளை எண்ணி முடிக்கும்போது, அங்கு 66 ஆயிரத்து 2 வாக்குகளை திமுக வேட்பாளர் ஆ. மணி பெற்றார். பாமக வேட்பாளர் சௌமியா 79 ஆயிரத்து 527 வாக்குகளை அள்ளினார். இதனால் தொடர்ந்து முன்னிலை வகித்தார் சௌமியா.

அதன்பிறகு, பாப்பிரெட்டிபட்டி தொகுதி வாக்குகளை எண்ணி முடிக்கும்போது 73 ஆயிரத்து 700 வாக்குகளை திமுக பெற்றது. பாமக வேட்பாளர் சௌமியா 82 ஆயிரத்து 434 வாக்குகளைப் பெற்றார். சௌமியா அன்புமணி பெற்ற வாக்குகள் தொடர்ந்து உயர்ந்து வந்ததால், திமுக அங்கு பின்னடைவைச் சந்தித்து வந்தது. இந்த 4 தொகுதிகள் வரை பாமக முன்னிலை வகித்து வந்தது.

நடந்த ட்விஸ்ட்: அதன் பிறகு தான் திறக்கப்பட்டது அரூர் (தனி) சட்டசபை தொகுதிக்குட்பட்ட வாக்கு பெட்டிகள். அங்குதான் எல்லாமே தலைகீழாக மாறியது. தனி தொகுதியான அரூர் தொகுதியில் திமுக 85 ஆயிரத்து 850 வாக்குகள் பெற்றது. பாமகவின் சௌமியா அன்புமணி 46,175 வாக்குகள் மட்டுமே பெற்றார். அரூர் தொகுதியில் மட்டும் பாமகவை விட அதிமுக அதிக வாக்குகளை பெற்றது.

அரூர் தொகுதியில் மட்டுமே 40 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் பாமகவை விட அதிகம் பெற்றார் திமுகவின் மணி. அங்கு தான் சௌமியா அன்புமணி பின்னுக்கு தள்ளப்பட்டார். அரூர் தொகுதியில் திமுக பெற்ற வாக்குகளே சௌமியா அன்புமணியின் தோல்விக்கும் முக்கிய காரணமாக அமைந்துவிட்டது.

lok sabha election 2024 sowmiya anbumani dharmapuri 2024

சௌமியா தலையெழுத்தை மாற்றிய அரூர்: தொடர்ந்து, மேட்டூர் தொகுதி வாக்குகளை எண்ணி முடிக்கும்போது திமுக வேட்பாளர் 67 ஆயிரத்து 824 வாக்குகள் பெற்றிருந்தார். பாமக வேட்பாளர் சௌமியா 63 ஆயிரத்து 265 வாக்குகளை பெற்றிருந்தார். முடிவில் ஒட்டுமொத்தமாக திமுக மணி 4,32,667 வாக்குகளும், பாமகவின் சௌமியா 4,11,367 வாக்குகளும் பெற்றனர். சௌமியா அன்புமணி 21,300 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.

தாழ்த்தப்பட்ட மக்கள் அதிகம் வசிக்கும் அரூர் (தனி) தொகுதி வாக்காளர்கள் தான் சௌமியா அன்புமணியின் தலையெழுத்தையே மாற்றிவிட்டனர். இதே போல தான் 2019 லோக்சபா தேர்தலிலும் அன்புமணி முன்னிலை வகித்து வந்த நிலையில் அரூர் தனி தொகுதி பாமகவை தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.

பாமக, இந்த தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து 10 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், தருமபுரியில் மட்டுமே நெருக்கமாக வந்து தோல்வியைச் சந்தித்தது. மற்ற அனைத்து இடங்களிலும் அக்கட்சியால் மூன்றாம் இடத்தையே பிடிக்க முடிந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+