சட்டத்தை ஆராயாமல் தவறான முடிவு எடுத்தாரா ஆளுநர்? பன்னீர் செல்வம் பதவி பறிபோன பரபரப்பு பின்னணி
பன்னீர் செல்வத்திற்கே பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் முதலில் உரிமை கொடுத்திருக்க வேண்டும். இதில் ஏதேனும் சந்தேகம் இருந்திருந்தால், இந்திய அட்டார்னி ஜெனரலிடம் அவர் ஆலோசனை கேட்டிருக்கலாம்.
சென்னை: தமிழக அரசியல் நெருக்கடி நேரத்தில், ஆளுநர் (பொறுப்பு), வித்யாசாகர் ராவ் தனது கடமையை சரியாக ஆற்றவில்லை என்ற சந்தேகம் சட்ட வல்லுநர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஆளுநரின் நடவடிக்கைகள் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு ஆதரவாக இருந்ததாக முந்தைய உதாரணங்களை முன் வைத்து சாடுகிறார்கள் சட்ட வல்லுநர்கள்.
புகழ்பெற்ற எஸ்.ஆர்.பொம்மை மற்றும் மத்திய அரசுக்கு நடுவே நடைபெற்ற வழக்கில் சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்புதான், பல்வேறு மாநிலங்களில் அரசியல் சிக்கல் ஏற்பட்ட காலத்தில் எல்லாம் சட்ட வல்லுநர்களால் முன் உதாரணமாக காட்டப்படும்.
அந்த வழக்கு உதாரணத்தின் அடிப்படையில் பார்த்தால், தமிழகத்தில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆளுநர் தரப்பு அநீதி இழைத்துவிட்டதாகவே கருதுகிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

ஓ.பி.எஸ்சுக்கே முதல் உரிமை
பொம்மை, வழக்கின் உதாரணங்கள் படி பார்க்கப்போனால், ஓ.பன்னீர் செல்வத்தைதான் பெரும்பான்மையை நிரூபித்துக் காட்டுமாறு ஆளுநர் உத்தரவிட்டிருக்க வேண்டும். பன்னீர்செல்வம் அவரது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தபோது, அவருக்கு தேவையான எம்.எல்.ஏக்கள் பலம் இருந்தது என்பதை ஆளுநர் கருத்தில் கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதை ஆளுநர் செய்யவில்லை.

அடைத்து வைப்பு
ஓ.பன்னீர் செல்வம் ஆளுநரிடம் பல முறை தனக்கு பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள் பலம் இருப்பதாக கூறியிருந்தார். அதிமுக எம்.எல்.ஏக்கள் ரிசார்ட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்ததால், அவர்களிடமிருந்து கையெழுத்து பெற்ற மனுவை ஆளுநரிடம் சமர்ப்பிக்க முடியவில்லை என்றும் பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார்.

முதல்வருக்கே மிரட்டல்
மேலும், தன்னை மிரட்டிதான் முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வைத்தனர் என்று ஓ.பன்னீர் செல்வம் பகிரங்கமாக குற்றம்சாட்டியிருந்தார். இந்த குற்றச்சாட்டை, ஆளுநர் விசாரிக்கவேயில்லை. சந்தேகத்தின் பலனை அவர் பன்னீர் செல்வத்திற்குத்தான் சாதகமாக்கியிருக்க வேண்டும். பன்னீர் செல்வத்தைதான் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு அவர் உத்தரவிட்டிருக்க வேண்டும்.

நம்பிக்கை வாக்கெடுப்பே தேவையில்லை
இதில் கவனிக்கத்தக்கது என்னவென்றால், எம்.எல்.ஏக்கள் கட்சி மாறியதாக சந்தேகம் ஏற்பட்டால்தான் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த ஆளுநர் உத்தரவிட வேண்டும். பொம்மை, வழக்கில் இது தெளிவாக உள்ளது. எனவே முதல்வராக பன்னீர் செல்வத்தை தொடரச் செய்ய ஆளுநர் உத்தரவிட்டிருக்க முடியும். ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வைத்தது, அதிமுக உள் விவகாரத்தில் ஆளுநர் தலையிட்டதை போலதான் உள்ளதே தவிர, அரசியல் சாசன அடிப்படையில் அதற்கான அவசியம் இல்லை என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

ஆலோசனை நடத்தவில்லை
பொம்மை வழக்கு அடிப்படையில் பார்த்தாலும், பன்னீர் செல்வத்திற்கே பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் முதலில் உரிமை கொடுத்திருக்க வேண்டும். இதில் ஏதேனும் சந்தேகம் இருந்திருந்தால், இந்திய அட்டார்னி ஜெனரலிடம் அவர் ஆலோசனை கேட்டிருக்கலாம். அல்லது அட்டார்னி ஜெனரல் ஏற்கனவே கூறியபடி, பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவரையும் ஒரே நேரத்தில் நம்பிக்கை கோரச் செய்திருக்கலாம். அப்படியானால் ஆட்சி கலையும் என்ற பயமின்றி, ஓ.பி.எஸ்சுக்கு கூட அதிக எம்.எல்.ஏக்கள் வாக்களித்திருக்க வாய்ப்பு இருந்தது.












Click it and Unblock the Notifications