அட்டகத்தியில் அம்பேத்கர் படம் வைத்தால் மதுரை பக்கம் படம் ஓடாது என்றார்கள்...
கேள்வி: அட்டகத்தியில் உங்களுக்கு பிரச்சனைகள் வந்ததா?
பதில்: அம்பேத்கர் படத்தை மாட்டக்கூடாதென பிரச்சனை வந்தது. எங்கள் வீடுகளில் ஒருபக்கம் கலைஞர் போட்டோ இன்னொரு பக்கம் எம்.ஜி.ஆர் போட்டோவும் இருக்கும். கூடவே அம்பேத்கர் போட்டோவும். என் அப்பா திமுகவில் இருந்தார்.
ஆனால் எம்ஜிஆர் ரசிகர். இப்படித்தான் இருக்கும். ஆகவே அட்டகத்தியில் மூன்று பேரின் போட்டோவையும் வீட்டுச் சுவரில் மாட்டியிருந்தேன். ஆனால் அம்பேத்கரின் படம் இருந்தால் மதுரை பக்கம் படம் ஓடாது என்று சொல்லி எடுக்கச் சொன்னார்கள்.
அம்பேத்கரோடு நான் அடிக்கடிப் பேசுவதுண்டு. அன்றும் பேசினேன். 'உங்கள் புகைப்படத்தை எடுக்கிறேன் என்று கோவிச்சுக் காதீங்க. உங்க மக்கள் பத்தின படத்தைத்தான் நான் எடுக்கிறேன்' என்று அவரிடம் சொல்லிவிட்டு போட்டோவை எடுத்தேன்.
அப்புறம் மாட்டிறைச்சி குறித்து வசனத்தைப் படமாக்கும்போது உள்ளூற இக்காட்சியை படமாக்க வேண்டாம் என்று சொல்வார்களோ என்று பயமாக இருந்தது. அதைப் படமாக்கியவுடன் அத்தனை திருப்தியாக இருந்தது. படத்தில் நிறைய பேசியிருந்தோம்.
நிறைய எடிட் செய்து தூக்கிவிட்டார்கள். இக்காட்சியும் போய்விடுமோ என்று நினைத்துக்கொண்டிருந்தேன். நல்லவேளையாக இக்காட்சி மட்டும் தப்பித்தது. முதன்முறையாக தலித்துகள் தங்களைப் பொருத்திப்பார்த்துக்கொண்ட படமாக அது இருந்தது. அப்போதே தொடங்கிவிட்டனர் சிலர்.
'தலித் வாழ்க்கையை ரஞ்சித் கொச்சைப்படுத்திவிட்டார்' என்று. ஆக ஆரம்பத்திலேயே ஒரு முத்திரை விழுந்துவிட்டது. அடுத்தப் படம் கிடைக்கவேண்டுமே என்கிற கவலை இருந்தது. பெரும்பான்மையினர் சாதியோடு இருப்பதால் ஒரு பயம் இருந்தது.
ஆனால் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தினர், சி.வி.குமார் போன்றோருக்கு நான் யார், என்ன சாதி, என்ன செய்கிறேன் என்று அறிந்தேதான் எனக்கு படம் தந்தனர். அதற்கு நன்றி சொல்லத்தான் வேண்டும்.