தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை எப்படி இருக்கும்.. வஞ்சம் இல்லாமல் வாரி வழங்குமா.. வானிலை மையம் பதில்
Recommended Video
சென்னை: தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட 16 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது. ஆனால் வடகிழக்கு பருவமழை இயல்பை ஒட்டியே இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
6 மாதங்கள் மழையில்லாமல் காய்ந்து கிடந்த சென்னை மற்றும் அதை ஒட்டிய மக்களை தென்மேற்கு பருவமழை தான் குஷிப்படுத்தியது. கடவுளின் தேசமான கேரளாவையும். அப்படியே அரபிக்கடல் செல்லும் கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா, குஜராத்தில் வஞ்சம் இல்லாமல் தென்மேற்கு பருவ மழை பெய்தது.
அப்படியே தமிழகத்தின் பக்கமும் தென்மேற்கு பருவ மழை இந்த ஆண்டு பூமி குளிர பெய்துவிட்டு சென்றுள்ளது. காவிரித்தாய் இரண்டாவது முறையா மேட்டூர் அணையை நிரப்பி விட்டு கரைபுரண்டு ஓடிக்கொண்டிருக்கிறாள்.

மகிழ்வித்த மழை
சென்னையில் இந்த மூன்று மாதங்களில் மாலை நேரங்களில் அடிக்கடி பெய்த மழை நிச்சயம் இயல்பைவிட மிக அதிகம் ஆகும். 100 செமீ மழைக்கு மேல் இரண்டு முறை ஒரே நாளில் சென்னையில் பெய்திருக்கிறது இந்த மூன்று மாதத்தில் மட்டும். இப்படி மண்ணையும் மக்களையும் குளிர்வித்த தென்மேற்கு பருவமழை இன்னும் சில வாரங்களில் விடை பெற போகிறது. அக்டோபர் மாதம் 20ம் தேதிக்கு மேல் வடகிழக்கு பருவ மழை துவங்க போகிறது.

எப்படி இருக்கும்
நிச்சயம் இந்த மழை தமிழகம், ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட வங்ககடலை ஒட்டிய மாநிலங்களை குளிரவைக்கப்போகிறது. இந்த மழை எப்படி இருக்கும், கடந்த ஆண்டை போல் இருக்குமா அல்லது நன்றாக இருக்குமா என்பது போன்ற கேள்விகளுக்கு சென்னை வானிலை மையம் விளக்கம் அளித்துள்ளது.

தென்மேற்கு பருவ மழை
இது குறித்து சென்னை வனிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, "தமிழகத்தில் செப்டம்பர் மாதம் இயல்பை விட அதிகமாக மழை பெய்திருக்கிறது. தமிழகத்தில் செப்டம்பர் மாதம் இயல்பு அளவு 10 செ.மீ மட்டுமே, ஆனால் 16 செ.மீ., மழை சராசரியாக பெய்துள்ளது. சென்னையில் ஜூன் 1 ஆம் தேதி முதல் தற்போது வரை 59 செ.மீ., மழை பெய்துள்ளது. இது இயல்பை விட 39% அதிகம் ஆகும்

நீடிக்கும் தென்மேற்கு பருவமழை
தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி தென்மேற்கு பருவமழை தொடர்க்கூடிய சூழ்நிலையே இருக்கிறது.. அக்டோபர் இரண்டாவது வாரம் வரை தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் இருக்கும். அக்டோபர் 20ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்குவது இயல்பானது. இந்தாண்டு தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை இயல்பான அளவில் பெய்யும்" என்றார்












Click it and Unblock the Notifications