மைக்ரோ ஏடிஎம்மில் பணம் பரிமாற்றம் செய்வது எப்படி தெரியுமா மக்களே?
வங்கிகள் இல்லாத கிராமங்களில் பணம் எடுக்க, செலுத்த கடன் வாங்க மைக்ரோ ஏடிஎம்களை அறிமுகம் செய்துள்ளது மத்திய அரசு மைக்ரோ ஏடிஎம் எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
சென்னை: ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று கடந்த செவ்வாய்க்கிழமையன்று இரவு பிரதமர் நரேந்திர மோடி அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டார். இதனால், மக்கள் நாடு முழுவதும் வங்கிகள் முன் பணத்தை மாற்றிச்செல்ல குவிந்துள்ளனர். கடந்த நான்கு நாட்களாக ஏடிஎம்களில் பணம் எடுக்கவும் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
வங்கிகளில் போய் மணிக்கணக்கில் காத்திருந்து பணம் எடுத்த காலம் போய் வீட்டிற்கு அருகில் ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்கும் அளவிற்கு எளிதானது. 500, 1000 ரூபாய்களுக்கு விதிக்கப்பட்ட தடையால் ஏடிஎம் மையங்களில் கூட்டம் அலைமோதுகிறது. பணத்திற்கு விதிக்கப்பட்ட தடை, சில்லறை தட்டுப்பாடு காரணமாக தற்போது கிராமங்களில் உள்ள மக்களும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மக்களின் சிரமத்தைப் போக்க மைக்ரோ ஏடிஎம்களை அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார் பொருளாதார விவகாரத்துறை செயலர் சக்தி காந்த தாஸ்.
மைக்ரோ ஏடிஎம்கள் ஒரு கையடக்க கருவி. பஸ்சில் கண்டக்டர் வைத்திருப்பது போலவும், கடைகளில் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு ஸ்வைப் செய்வதற்காக வைக்கப்பட்டுள்ள மெசின் போல இருக்கும்.
ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட இந்த மைக்ரோ ஏடிஎம் மெசின்கள், வங்கிக்கு வர முடியாத வாடிக்கையாளர்களை நாடி வரும். வாடிக்கையாளரின் ஆதார் எண் இணைக்கப்பட்டிருப்பதால் இந்த மைக்ரோ ஏடிஎம்களை கையாள்வது எளிது. இதை கைகளில் எடுத்துச் செல்லலாம்.
மைக்ரோ ஏடிஎம் என்பது சிறிய வடிவிலான ஆன்லைன் வங்கிச் சேவையாகும். இந்த மைக்ரோ எடிஎம்ஐ எங்கு வேண்டுமானாலும் எளிதாக எடுத்துச் செல்லாம். இந்த சேவையின் மூலமாக வங்கி கணக்கு வைத்துள்ள பயனாளர்கள் பணம் எடுத்துதல், பணத்தை வங்கி கணக்கில் செலுத்துதல், கடன் வாங்குதல் , கடன் வசூலித்தல் போன்ற பணப்பரிமாற்ற நடவடிக்கைகளை எளிதாக மேற்கொள்ள இயலும்.
இந்த மைக்ரோ ஏடிஎம் மூலம் பண பரிமாற்றம் மேற்கொள்ள பயனாளர்கள் வங்கியில் கணக்கு வைத்திருக்க வேண்டும். மேலும் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு அல்லது ஆதார் எண் , மொபைல் எண்ணை வங்கி கணக்கில் இணைப்பதன் மூலமாக நாம் பணப்பரிமாற்றத்தை சாமான்ய மனிதனும் எளிதாக மேற்கொள்ளலாம். இந்த சேவையானது மிகவும் பாதுகாப்பு அம்சங்கள் கொண்டது. .
மைக்ரோ ஏடிஎம் மூலம் மேற்கொள்ளப்படும் பண பரிமாற்ற நடவடிக்கைகளுக்கு உரிய ரசீது வழங்கப்படும். இந்த சேவையானது ஏடிஎம் மையங்கள் குறைவாக உள்ள கிராமப்புற மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இப்போது உள்ள பணத்தட்டுப்பாடு பிரச்சினைக்கு மைக்ரோ ஏடிஎம்கள் கை கொடுக்கும் என்று மத்திய அரசு நினைக்கிறது எனவேதான் நாடு முழுவதும் நடமாடும் மைக்ரோ ஏடிஎம்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக சக்தி காந்த தாஸ் கூறியுள்ளார்.
மைக்ரோ எடிஎம்ஐ பார்த்து இதுல எப்படிண்ணே பணம் வரும் என்று வைதேகி காத்திருந்தால் செந்தில் போல கேட்காமல் இருந்தால் சரிதான்.