கூடங்குளம் அருகே மீண்டும் குண்டு வீச்சு- 30க்கும் மேற்பட்ட குண்டுகள் பறிமுதல்
தூத்துக்குடி: கூடங்குளம் அருகே கூத்தன்குழியில் மீண்டும் சராமரியாக வெடிகுண்டுகள் வீசி தாக்குதல் நடந்தது. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அணு உலைக்கு எதிராக கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக போராட்டம் நடந்து வருகிறது. அணு உலை ஆதரவு, எதிர்ப்பு கோஷ்டிகளுககு இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. இரு தரப்பிலும் ஒருவருக்கொருவர் நாட்டு வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
கடந்த 2013ல் செப்டம்பரில் இடிந்தகரையில் நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கி வைத்திருந்த போது அவை திடீரென வெடித்து சிதறின. இதில் 7 பேர் பலியாகினர்.

போலீசார் சோதனை நடத்த போவதாக வந்த தகவலை அடுத்து அதனை பதுக்கி வைத்திருந்தவர்கள் பல வெடிகுண்டுகளை கடலில் வீசி அழித்தனர்.
இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 23ம் தேதி இடிந்தகரை சவேரியர் கோயிலில் அணு உலை ஆதரவு, எதிர்ப்பு கோஷ்டியினர் மோதி கொண்டனர். இதில் சராமரியாக வெடிகுண்டுகளும் வீசப்பட்டன. இதுபோல் மாலையிலும் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
வழக்கம் போல் ஒருவருக்கொருவர் நாட்டு வெடிகுண்டுகளை வீசி கொண்டனர். இதுகுறித்த போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது,
கூத்தன்குழியில் சுதாகர், சிலுவை சித்தேரியன் ஆகியோர் இரு குழுக்களாக செயல்பட்டு வருகின்றனர். சுதாகர் அங்குள்ள தனியார் தாது மணல் ஆலையில் வேலை செய்து வருகிறார். தாது மணல் ஆதரவு, எதிர்ப்பு கோஷ்டியினர் இடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு ஊரில் சடங்கு நிகழ்ச்சியில் மோதல் ஏற்பட்டது.
இந்த நிலையில் மாலையில் கூத்தன்குழி பாத்திமா நகர் பகுதியில் இரு கோஷ்டியினர் நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். சுமார் 50 குண்டுகள் வரை வீசப்பட்டன.
இதில் அதே பகுதியை சேர்ந்த மதன், ரீகன் காயமடைந்துள்ளனர். அவர்கள் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்ததும் நெல்லை எஸ்பி நரேந்திரன் நாயார் தலைமையிலான போலீசார் குவிக்கப்பட்டனர்.
இது தொடர்பாக கூத்தன்குழியை சேர்ந்த பிரான்சிஸ், இருதயம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் எஸ்பி தலைமையில் போலீசார் வீடு வீடாக சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள முட்செடிக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 48 நாட்டு வெடிகுண்டுகளை கைப்பற்றினர். அங்கு பதற்றம் நிலவி வருவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications