தொப்புள் கொடியை அறுக்க விடமாட்டோம்.. மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவர்.. தேனி போலீஸிடம் வாதம்
மனைவிக்கு கணவன் வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளார்.
Recommended Video
தேனி: மனைவிக்கு வீட்டிலேயே கணவன் பிரசவம் பார்த்ததுடன், தொப்புள் கொடியை அறுக்கவே கூடாது என போலீசாரிடம் கணவனும், மனைவியும் வாக்குவாதம் நடத்திய சம்பவம் தேனி அருகே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோடாங்கிப்பட்டியை சேர்ந்தவர் கண்ணன். வயது 27. இவரது மனைவி மகாலட்சுமி 21. இவர்களுக்கு ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்று மகாலட்சுமியும் கர்ப்பமானார்.
இந்நிலையில் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு குழந்தையும் பிறந்தது. வீட்டிலேயே குழந்தை பிறந்ததால் அக்கம் பக்கத்தினர் அனைவரும் வந்து பார்த்தனர். அப்போது கண்ணன்தான் மகாலட்சுமிக்கு பிரசவம் பார்த்ததாக கூறப்பட்டது. இந்த செய்தி அந்த ஊர் முழுவதும் பரவி பரபரப்பானது. அதனால் அரசு மருத்துவமனை டாக்டர்களும், போலீசாரும் கண்ணன் வீட்டுக்கே வந்துவிட்டனர்.
வீட்டிலேயே சுகப்பிரசவம்
மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல் வீட்டிலேயே வைத்து ஏன் பிரசவம் பார்த்தீர்கள்? என போலீசார் கண்ணனிடம் கேட்டனர். அதற்கு கண்ணன், "பொதுவாக எங்கள் குடும்பத்தில் எல்லோரும் வீட்டிலேயே சுகப்பிரசவத்துடன் வீட்டிலேயே பிறந்தவர்கள். மருத்துவமனை பிரசவத்தில் சில தவறு கூட நடக்காமல், ஆனால் எங்கள் வீட்டில் பார்த்த பிரசவத்தில் எந்த தவறும் நடக்கவில்லை. குழந்தையும் ஆரோக்கியமாக உள்ளது, என் மனைவியும் களைப்பின்றி தெளிவுடன் இருக்கிறார்" என்றார் கண்ணன்.
தொப்புள் கொடி அறுக்க கூடாது
இதனை கேட்ட அரசு மருத்துவமனை டாக்டர்கள், சரி, குழந்தையை தூக்கி கொண்டு வந்து தடுப்பு ஊசி போட்டுக் கொள்ளுங்கள்" என்றனர். ஆனால் அதற்கும் அவர்கள் மறுத்துவிட்டனர. இதனால் என்ன பேசுவதென்று தெரியாத மருத்துவர்கள், குழந்தையின் தொப்புள் கொடியை அறுக்க சென்றனர். அதற்கும் மறுப்பு தெரிவித்த அவர்கள், "தொப்புள் கொடி என்பது தானாகத்தான் கீழே விழ வேண்டும், நாமாக அறுத்தெறிய கூடாது. அப்போதுதான் அதிலுள்ள நச்சுகள் குழந்தையின் உடலில் கலந்து இம்மியூனிட்டி என்னும் நோய் எதிர்ப்பு சக்தியினை தரும்" என்றனர்.
கதவை இழுத்து மூடினர்
எதற்குமே வளைந்து கொடுக்காமல் அசராது பதிலளித்த கண்ணன் குடும்பத்தினரை, போலீசார் எச்சரித்தனர். வீட்டில் வைத்து பிரசவம் பார்த்தால் எவ்வளவு ஆபத்து என்பதை உணர்த்தினர். அதனால் கண்ணன் குடும்பத்தினருக்கும் போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கண்ணனின் தந்தையை போலீசார் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். இதையடுத்து கண்ணன் வீட்டுக்கு ஆம்புலன்ஸ் வரவழைத்த டாக்டர்கள், குழந்தைக்கு மட்டும் சிகிச்சை தருகிறோம் என்றனர். ஆனால் அவர்கள் குழந்தையை தூக்கிக் கொண்டு உள்ளே சென்று மொத்தமாக இழுத்து மூடி கதவை அடைத்து கொண்டனர்.
அடம்பிடித்த கண்ணன்
பிரசவத்துக்கு மருத்துவமனையும் வராமல், தாயும்-சேயும் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சையும் எடுத்து கொள்ளாமல், தொப்புள் கொடியையும் அறுக்க விடாமல், குழந்தைக்கு தடுப்பு ஊசியும் போட்டுக் கொள்ளாமல் அடம் பிடித்த கண்ணன் குடும்பத்தாரின் செயல் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.