அய்யயோ முரட்டு தைரியம் இருக்கவே கூடாது... அலறும் 'முரட்டுக் காளை' ரஜினிகாந்த்
ஆற்றில் காலை வைத்தவுடன் முதலைகள் இருப்பது தெரிந்தும் யாராவது முன்வைத்த காலை பின் வைக்க மாட்டேன் என்று சொல்ல முடியுமா? என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
சென்னை: ஆற்றில் காலை வைத்தவுடன் முதலைகள் இருப்பதை தெரிந்தும் யாராவது அதில் கால் வைப்பார்களா? என்று ரஜினிகாந்த் கேள்வி எழுப்பினார்.
கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் கரூர், குமரி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களுடன் இன்று ரஜினி சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொள்கிறார். தொடர்ந்து இந்த சந்திப்பானது 5 நாள்களுக்கு நடைபெறுகிறது.
இந்த சந்திப்பு நிகழ்ச்சி நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில், ஈழத் தமிழர்களுக்கு வீடு வழங்கும் விழாவில் கலந்து கொள்ள இலங்கை செல்வதாக இருந்தது. அது பல்வேறு காரணங்களால் ரத்து செய்யப்பட்டது.
இதை சிலர் ரஜினிக்கு ஸ்திரத்தன்மை இல்லை என்றும், அவர் மனதை அவ்வப்போது மாற்றிக் கொண்டே வருகிறார் என்றும், பயப்படுகிறார் என்றும், தயங்குகிறார் என்றும் சிலர் பேசினர், சிலர் எழுதினர்.
ஆற்றில் காலை வைக்கிறோம். அப்போது முதலைகள் நிறைய உள்ளது என்று தெரிகிறது. அதை தெரிந்தும் யாராவது காலை வைப்பார்களா? முதலை இருந்தாலும் முன் வைத்த காலை பின் வைக்க மாட்டேன் என்று கூறும் முரட்டு தைரியம் இருக்கக் கூடாது.
எப்போதும் எந்த முடிவை எடுத்தாலும் பலமுறை யோசித்த பிறகே அதில் இறங்குவேன் என்றார் அவர்.