இரட்டை இலை இல்லாத நிலையிலும் ஆர்கே நகர் வேட்பாளர் நானே- மாற்றம் எதுவும் இல்லை: தினகரன்
ஆர்கே.நகர் வேட்பாளர் நான்தான் அதில் எந்த மாற்றமும் இல்லை என்றும் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை: இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியிருப்பது பின்னடைவு அல்ல என சசிகலா தரப்பு அதிமுக வேட்பாளரான டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார். ஆர்கே.நகர் வேட்பாளர் நான்தான் என்றும் அதில் எந்த மாற்றமும் இல்லை என்றும் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் வெற்றி சின்னமான இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியுள்ளது. அதிமுகவின் பெயரையும் பயன்படுத்த தேர்தல் ஆணையம் தடைவிதித்துள்ளது.
எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு இரண்டாவது முறையாக இரட்டை இலைச்சின்னம் முடக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னையில் சசிகலா தரப்பு ஆர்கே.நகர் வேட்பாளரான டிடிவி.தினகரன் செய்தியாளர்களிடம் பேசினார்.

ஜெ.வைப்போல் மீட்டெடுப்போம்
அப்போது இரட்டை இலைச்சின்னம் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது, நிச்சயம் அதனை மீட்டெடுப்போம் என டிடிவி.தினகரன் நம்பிக்கை தெரிவித்தார். எம்ஜிஆர் மறைவுக்குப் பின் ஜெயலலிதா மீட்டெடுத்ததுப்போல் கட்சியையும் சின்னத்தையும் மீட்போம் என்றும் தினகரன் கூறினார்.

அதிர்ச்சி அல்ல அனுபவம்
சட்டப்படி இரட்டை இலையை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இரட்டை இலை முடக்கம் அதிர்ச்சி அல்ல, அனுபவம் தான் என்றும் தினகரன் கூறினார். சின்னம் முடக்கப்பட்டிருப்பது தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் தினகரன் தெரிவித்தார்.

பின்னடைவு அல்ல
இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியிருப்பது பின்னடைவு அல்ல. ஏற்கனவே இரட்டை இலைச்சின்னம் முடக்கப்பட்டது. அதை மீட்டெடுத்த அனுபவம் எங்களுக்கு உள்ளது என்றும் அவர் கூறினார்.

நான்தான் வேட்பாளர்
ஆர்கே.நகர் வேட்பாளர் நான் தான் அதில் எந்த மாற்றமும் இல்லை என்றும் டிடிவி.தினகரன் தெரிவித்தார். இடைத்தேர்தலில் எந்த சின்னத்தில் போட்டியிட்டாலும் பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெறுவோம் என்றும் தினகரன் நம்பிக்கை தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications