யுத்தத்தை இழக்கவில்லை, நான் தோற்கவில்லை, தொடர்ந்து போராடுவேன்: வைகோ
நாகர்கோவில்: நான் தோற்கவில்லை, இன்னும் போராடுவேன். நாங்கள் ஒரு களத்தை தான் இழந்தோமே தவிர யுத்தத்தை அல்ல என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
மதிமுக நிர்வாகி இல்லத் திருமண நிகழ்ச்சி நாகர்கோவிலில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
அப்போது அவர் கூறுகையில்,
பணம்
தமிழக தேர்தலை பணம் தான் தீர்மானிக்குமா? இது தான் நிரந்தரமா? இதற்கு மாற்று இல்லையா? அப்படி எனில் பணம் படைத்தவர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிட வேண்டுமா? இந்த நிலையை மாற்றும் பொறுப்பு நமக்கு உள்ளது. நான் மீட்பர் அல்ல. மீட்பர்கள் வழியில் செல்லும் ஒரு சாதாரண போர் வீரன்.
வாக்காளர்கள்
தேர்தல் நேரத்தில் மக்கள் தங்களின் மனநிலைக்கு ஏற்றபடி வாக்களிக்கிறார்கள். ஜனநாயக தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறேன். ஆனால் தமிழக தேர்தலில் பணம் தான் முடிவை தீர்மானித்துள்ளது. இந்த நிலை நீடித்ததாக இயற்கை நியதி கிடையாது.
அநீதி
எந்த ஒரு அநீதிக்கும் முடிவு உண்டு. அநீதியை ஒரே நாளில் வெல்ல முடியாது. எந்த ஒரு முயற்சியும் ஒரே நாளில் வெற்றி பெற்று விடாது. தோற்றுவிட்டோமே என்று நினைப்பவனுக்கு லட்சியத்தில் நம்பிக்கை இல்லை என்று அர்த்தம். நான் தோற்கவில்லை, இன்னும் போராடுவேன். நாங்கள் ஒரு களத்தை தான் இழந்தோமே தவிர யுத்தத்தை அல்ல.
தேர்தல் ஆணையம்
கட்சிகளின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையத்தால் ரத்து செய்ய முடியும். ஆனால் அதை தேர்தல் ஆணையம் இதுவரை செய்யவில்லை. இது குறித்து மத்திய அரசு சட்டம் கொண்டு வர வேண்டும்.
சட்டம்
ஒரு வேட்பாளர் வாக்காளர்களுக்கு பணம் அளித்தார் என்பதை தேர்தல் ஆணையத்திடம் நிரூபித்தால் அவரை தகுதி நீக்கம் செய்யும் அதிகாரத்தை வழங்கும் வகையில் சட்டம் கொண்டு வர வேண்டும்.