தமிழ்நாடே வேண்டாம்.. நான் ஊருக்கு போறேன்.. தாக்கப்பட்ட வடமாநில தொழிலாளி மருத்துவமனையில் கதறல்
திருத்தணி: "நான் என் ஊருக்கே போறேன்.. தமிழ்நாடு வேண்டாம்.." இதுதான், திருத்தணி ரயிலில் பயணித்தபோது, தமிழ்நாட்டு சிறுவர் கூட்டத்தால், ஈவு இரக்கமின்றி அரிவாளால் வெட்டப்பட்ட, வட மாநில இளைஞர் சிராஜ், மருத்துவர்களிடம் சொன்ன வலிமிகுந்த வார்த்தைகள்.
உடல் முழுக்க காயங்களுடன், மருத்துவமனை படுக்கையில் படுத்தபடி அந்த புலம்பெயர் தொழிலாளி கலங்கும் காட்சிகள் மனதை உலுக்குவதாக உள்ளன.

திருத்தணி வடமாநில தொழிலாளி தாக்குதல் - நடந்தது என்ன?
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி செல்லும் சென்னை புறநகர் ரயிலில் பயணம் செய்த 4 சிறுவர்கள், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சிராஜை கத்தியை காட்டி மிரட்டி.. அதை ரீலில்ஸ் எடுத்து சந்தோஷப்பட்டுள்ளனர். இவர்கள் செய்த அட்டகாசம் தாங்க முடியாமல், வேண்டாங்க விட்டுருங்க என்று சிராஜ் சொல்ல.. அதைக் கேட்டு, முளைக்காத மீசை துடித்துள்ளது இந்த சிறுவர்களுக்கு.
சிராஜை சரமாரியாக தாக்கத் தொடங்கியுள்ளனர் அந்த பொடியர்கள். கத்தியை காட்டி மிரட்டி, அப்படியே ரயிலில் இருந்து அவரை கீழே இறக்கி, ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்று அரிவாளால் தலை, முகம், உடல் என பல பகுதிகளில் கொடூரமாக தாக்கி உள்ளனர். அதை வீடியோவாகவும் எடுத்து வெளியிட்டு தங்கள் "ஆண்மையின் பெருமையை" பறைசாற்றியுள்ளனர்.
இந்த சம்பவம் தமிழ்நாடு மட்டுமன்றி மொத்த நாட்டையே உலுக்கி உள்ளது. வடமாநில இளைஞர் தானே.. இவருக்கு எல்லாம் நியாயம் கேட்க யார் வருவார் என்று இளக்காரமாக அந்த இளைஞர்கள் கொடூரமாக தாக்கி உள்ளனர். படுகாயமடைந்த சிராஜ், கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவம் நடந்து கிட்டத்தட்ட 1.30 மணி நேரம் கழித்தே சிராஜ் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டு உள்ளார்.
கொடூரமான செயல்
கை,கால் தலை மற்றும் உடல் முழுவதும் கத்தியால் வெட்டப்பட்டு ரத்த காயங்களுடன் சிராஜ் கீழே விழுந்து கிடந்ததை பார்த்த மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் வெட்டு காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சிராஜை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

முதல் சிகிச்சை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட அவர் தற்போது சென்னையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சென்னையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிராஜ்.. உடல் முழுக்க காயங்களுடன் பேசக்கூட, திணறியபடி போராடிக்கொண்டு இருக்கிறார். இந்த கொடூர சம்பவத்தால்.. தமிழ்நாட்டில் இருக்கவே விருப்பம் இன்றி.. நான் என் சொந்த ஊருக்கே சென்று விடுகிறேன்.. அங்கேயே சிகிச்சை பார்த்துக்கொள்கிறேன் என்று மருத்துவர்களிடம் எழுதிக்கொடுத்து உள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications