நான் தமிழ் பேப்பர் படிச்சு ஒரு மாசம் ஆச்சு: சென்னை திரும்பிய விஜயகாந்த் தகவல்
சென்னை: எனக்கு தமிழகத்தில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. நான் ஒருமாதமாக தமிழ் பேப்பரே படிக்கவில்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
மலேசியா, சிங்கப்பூர் சுற்றுபயணம் முடித்துக்கொண்டு இன்று சென்னை திரும்பியுள்ள விஜயகாந்த் விமானநிலையத்தில் இவ்வாறு தெரிவித்தார்.
விஜயகாந்த் தனது மகன் சண்முகபாண்டியன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்புக்காக கடந்த நவம்பர் மாதம் 7ஆம் தேதி மலேசியா கிளம்பினார். அவருடன் மனைவி பிரேமலதா, மகன் சண்முக பாண்டியன் ஆகியோரும் சென்றிருந்தனர்.
மலேசியாவில் 10 நாட்களுக்கு மேலாக சண்முக பாண்டியன் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன. அதன் பிறகு படப்பிடிப்பு குழுவினர் சிங்கப்பூர் சென்றனர். அங்கும் சண்முக பாண்டியன் நடித்த காட்சிகள், பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டன.
இந்த நிலையில் படப்பிடிப்பு பணிகள் நேற்று முடிவடைந்ததால் விஜயகாந்த் இன்று சென்னை சென்னை திரும்பினார். தேமுதிகவினர் ஏராளமானோர் விமான நிலையத்திற்கு திரண்டு வந்து வரவேற்பு கொடுத்தனர்.
அப்போது அங்கிருந்த செய்தியாளர்கள் விஜயகாந்திடம் கேள்வி எழுப்பினர். தமிழக சட்டப்சபை கூட்டத்தில் பங்கேற்பீர்களா என்றும்? என்னமாதிரியான பிரச்சினைகளை பேசுவீர்கள் என்றும் செய்தியாளர்கள் விஜயகாந்திடம் கேட்டனர்.
அதற்கு பதில் சொன்ன விஜயகாந்த், நான் இப்போதுதான் சென்னைக்கு வந்து இறங்கியிருக்கிறேன். இங்கே என்ன பிரச்சினை நடக்கிறது என்று எனக்கு தெரியவில்லை. கடந்த ஒருமாத காலமாக நான் தமிழ் பேப்பர் படிக்கவில்லை. தமிழ் டிவி சேனல்களும் பார்க்கவில்லை.
வீட்டிற்கு போய் டிவி பார்த்துவிட்டு உங்களுக்கு பதில் சொல்கிறேன். சட்டசபை கூட்டத்தில் பங்கேற்பது பற்றி இப்போது சொல்ல முடியாது என்றார்.
இதற்குமேல் என்ன கேட்பது என்று தெரியாமல் செய்தியாளர்கள் விஜயகாந்திற்கு வழிவிட்டனர். (அப்ப மலாய் பேப்பர் படிச்சீங்களா சார் என்று கேட்டிருக்கலாமோ?)
தமிழக சட்டசபை கூட்டம் நாளை கூடுவதால் அதில் விஜயகாந்த் பங்கேற்பார் என்றும், இதற்காக இன்று மாலை தே.மு.தி.க. நிர்வாகிகளை சந்தித்து, சட்டசபையில் எழுப்ப வேண்டிய பிரச்சினைகள் குறித்து ஆலோசனை வழங்க இருப்பதாகவும் கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.