இதுவரைக்கும் என்ன ஒரு வார்த்தை வான்னு கூப்படலைங்க.. டிடிவி தினகரன் குமுறல்!
அதிமுகவின் இப்தார் நோன்பு திறப்பு தொடர்பாக தனக்கு இதுவரை அழைப்பிதழ் கொடுக்கப்படவில்லை என டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை: அதிமுக சார்பில் நடைபெறும் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி தொடர்பாக இதுவரை தனக்கு அழைப்பிதழ் கொடுக்கப்படவில்லை என டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். ஆர்கே நகர் தேர்தல் தொடர்பாக எந்த விசாரணையையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
அதிமுக சார்பில் நாளை இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை வர்த்தக மையத்தில் இப்தார் நோன்பு நிகழ்ச்சி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிகழ்ச்சிக்கு டிடிவி தினகரனையும் அழைக்க வேண்டும் என அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.
நிராகரித்த முதல்வர்
ஆனால் அதனை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நிராகரித்து விட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் சென்னை அடையாறில் உள்ள தனது வீட்டில் டிடிவி தினகரன் நேற்று மாலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
பொதுச்செயலாளர்தான்..
அப்போது குடியரசுத் தலைவர் தேர்தலில் அதிமுக யாருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்பதை பொதுச் செயலாளர் தான் முடிவு செய்வார் என்றார். பொதுச் செயலாளர் முடிவுக்கு 122 எம்.எல்.ஏக்களும் கட்டுப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.
நண்பனாகவே நினைக்கிறேன்..
எனக்கு எதிராக பேசும் அமைச்சர்கள் தங்களின் நிலையை விரைவில் மாற்றிக் கொள்வார்கள் என்றும் டிடிவி தினகரன் நம்பிக்கை தெரிவித்தார். 122 எம்.எல்.ஏக்களையும் நான் நண்பனாகவே நினைக்கிறேன், அவர்கள் யாருக்கோ பயப்படுகிறார்கள் என்றும் டிடிவி தினகரன் கூறினார்.
இதுவரை அழைப்பு வரவில்லை
கட்சி நடத்தும் இப்தார் விருந்திற்கு இதுவரை எனக்கு அழைப்பு வரவில்லை என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார். மேலும் கூவத்தூரில் எந்த தவறும் நடைபெறவில்லை என்றும் அவர் கூறினார்.
எந்த விசாரணைக்கும் தயார்
பேர விவகாரம் குறித்து ஆளுநர் உத்தரவிட்டிருக்கிறார் என்ற அவர் எங்களுக்கு மடியில் கணமில்லை என்றும் கூறினார். ஆர்.கே.நகர் தேர்தல் பணப்பட்டுவாடா குறித்த எந்த விசாரணைக்கும் தயார் என்றும் டிடிவி தினகரன் கூறினார்.