நான் வாழ வேண்டும் என்று விரும்புகிறேன்.. வைரலாகும் கருணாநிதி பேச்சு
சென்னை: நான் நூற்றாண்டை கடந்து வாழ விரும்புகிறேன் என்று திமுக தலைவர் மு.கருணாநிதி விழா ஒன்றில் பேசிய பேச்சு வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இந்த பொது நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த், கருணாநிதியின் அருகே அமர வைக்கப்பட்டுள்ளார். கூட்டத்தில் கமல்ஹாசன் உட்பட பல்வேறு நடிகர்களும் பிரமுகர்களும் அமர்ந்துள்ளனர்.
அதில்தான் கருணாநிதி தீர்க்கமான குரலில் பேசுகிறார்.

நான் வாழ விரும்புகிறேன்
கருணாநிதி பேசியதை பாருங்கள்: நான் வாழ வேண்டும் என்று விரும்புகின்றேன். சில நேரங்களில் சலிப்பில், என்ன வாழ்க்கை இது என்று சொன்னாலும் கூட, பொதுவாழ்க்கையில் ஏற்படுகின்ற, புயல், சூறாவளி, பூகம்பம் இவைகளின் காரணமாக சலிப்பு ஏற்பட்டு, என்ன வாழ்க்கை என்றாலும் கூட, சில நேரங்களில் எனக்கு இளையவர்கள், கழகத்தின் முன்னோடிகளாகன தொண்டர்கள், மரணமடையும்போது, நாம் இருந்து இதையெல்லாம் காணவேண்டியிருக்கிறதே என்று கவலைப் பட்டாலும் கூட, நான் வாழ வேண்டும் என்று விரும்புகிறேன்.

சுயநலத்தின் பின்னால் தாய் நாட்டு பற்று
நான் வாழ வேண்டும் என்று விரும்ப காரணம் தமிழை வாழ வைக்க வேண்டும் என்பதற்காக, தமிழர்களே இன்னும் நலமாக வாழ வைக்க வேண்டும் என்பதற்காக. இது சுயநலமாக கூட இருக்கலாம். ஆனால் இந்த சுயநலத்தை விரும்பாத ஒரு தாய் நாட்டு பற்று கொண்டவன், தாய்மொழி பற்று கொண்டவன் யாரும் இருக்க முடியாது. அந்த வகையில் சொல்கிறேன்.

உயிரை பறிக்க முடியாது
புராணங்களில் நம்புவது போல என்னுடைய உயிரை எமன் பறித்துவிட முடியாது. என்ன அகம்பாவம், என்ன நெஞ்சழுத்தம், என்ன ஆணவம் என்று நீங்கள் கருதுவீர்களேயானால் நான் ஒன்று சொல்கிறேன். மாமன்னன் கிள்ளிவளவன் இறந்து போனபோது, ஒரு புலவர் அங்கு வருகிறார். கிள்ளிவளவா, உனது உயிரை எமன் எப்படி எடுத்திருப்பான் என்று யோசிக்கிறேன். உறவினர் போல வந்து எடுத்திருப்பானா? முடியாது. பகைவராய் வந்தும் உன் உயிரை எடுக்க முடியாது? அப்படியானால், தமிழ்ப் புலவன் போல வந்து கையேந்தி உன்னிடத்தில் பிச்சை கேட்டு அல்லவா உனது உயிரை கேட்டு பெற்றிருக்க முடியும் என்று புலவர் பாடுகிறார்.

நூற்றாண்டை தாண்டி வாழ்வேன்
எப்போது அந்தப் பிச்சையை கிள்ளிவளவன் கொடுத்தானாம்? தமிழ் புலவருக்காக, தமிழுக்காக, தமிழருக்காக கொடுத்தானாம். அப்படி ஒரு தேவைப்படும் காலம் வரும்போது உயிரைக் கொடுப்பேனே தவிர வேறு யாருக்கும் கொடுக்க மாட்டேன். நீங்கள் விரும்புவது போல நூற்றாண்டுக்கு மேல் இருப்பேன். அதற்கும் முன்பாக கொடுக்க வேண்டுமென்றால், தமிழருக்காக, தமிழ் பண்பாட்டுக்காக, தமிழ் மொழிக்காக, தமிழ் இலக்கியத்திற்காக தான் கொடுப்பேன் இவ்வாறு கருணாநிதி அந்த பேச்சில் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications