அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன் - பண்ருட்டி ராமச்சந்திரன்!
சென்னை: நம்மால் முடிந்த ஆதரவை செய்ய வேண்டும். இந்திய அரசியலில் ஒரு மாற்றம் உருவாகக் கூடிய சூழ்நிலை உள்ளது. தேசிய அளவில் அண்ணாவின் முற்போக்கு கொள்கை ஏற்பட என்னால் முடிந்த ஆதரவு உண்டு. எனவே அதிமுவுக்கு ஆதரவாக லோக்சபா தேர்தலில் பிரசாரம் செய்வேன் என்று சமீபத்தில் தேமுதிகவிலிருந்து விலகியவரும், இன்று முதல்வர் ஜெயலலிதா கையால் அண்ணா விருது வாங்கியவருமான பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா இன்று விருதுகளை வழங்கினார். அப்போது அவரிடமிருந்து அண்ணா விருதை பண்ருட்டி ராமச்சந்திரன் பெற்றுக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.

அண்ணா விருது கிடைத்துள்ளதால் இதற்கு அரசியல் சாயம் பூசுவார்கள் என்று கருதுகிறீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, எதற்கும் அரசியல் சாயம் பூசத்தான் செய்வார்கள். பேரறிஞர் அண்ணா எல்லோருக்கும் பொதுவானவர். அவரது வழியில் அரசியல் நடத்திய எனக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது என்றார் பண்ருட்டியார்.
சரி, அண்ணாவின் கொள்கைகளை எப்படி பரப்புவீர்கள் என்று ஒரு செய்தியாளர் கேட்டபோது, 1967 பொங்கல் மலரில் அண்ணா ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில் அவர் கூறும் போது, வெள்ளம் எல்லோரையும் அழிக்க கூடியது. ஆனால் வாய்க்கால் தண்ணீர் அனைவருக்கும் வளம் அளிக்க கூடியது.
இந்த வாய்க்கால் போன்ற சிந்தனையால் அனைவருக்கும் செல்வ செழுமை கிடைக்க பாடுபட வேண்டியது நமது கடமை. இதற்கு சம தர்ம லட்சியத்தை உருவாக்கிட வேண்டும். செல்வம் ஒரே இடத்தில் சேர்ந்தால் அது வெள்ளம் போன்று அழிக்க கூடியது.
இந்திய மக்கள் தொகையில் பாதிபேரின் வருமானத்தை மேல் மட்டத்தில் உள்ள 3 சதவீதம் பேர் பெறக் கூடியது சூழல் உள்ளது. அந்த அளவுக்கு ஏற்றத்தாழ்வு உள்ளது. இந்த நிலை மாற முற்போக்கு கூட்டணியை ஆதரிக்க வேண்டும்.
அதை குறிக்கோலாக கொண்டு இயங்க வேண்டும் என்று அண்ணா ஏற்கனவே கூறியுள்ளார். அந்த வகையில் தமிழ்நாட்டில் அதிமுக, கம்யூனிஸ்டு கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளது. அந்த கூட்டணி கட்சிகள் முற்போக்கு கொள்கைக்காக பாடுபடுகிறது. யார் நல்ல கொள்கைகளை கொண்டு வருகிறார்களோ அவர்களை ஆதரிக்க வேண்டும் என்றார் ராமச்சந்திரன்.
வரும் லோக்சபா தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வீர்களா என்ற கேள்விக்கு, ஆமாம். நம்மால் முடிந்த ஆதரவை செய்ய வேண்டும் இந்திய அரசியலில் ஒரு மாற்றம் உருவாகக் கூடிய சூழ்நிலை உள்ளது. தேசிய அளவில் அண்ணாவின் முற்போக்கு கொள்கை ஏற்பட என்னால் முடிந்த ஆதரவு உண்டு. எண்ணை சட்டியில் இருந்து தப்பிக்க எரி நெருப்பில் விழுந்த கதையாக ஆகி விடக் கூடாது. எனவே ஏழை எளிய மக்களுக்காக யார் பாடு படுகிறார்களோ அவர்களை ஆதரிக்க அனைவரும் முன் வரவேண்டும், இந்திய அரசியலில் நல்ல மாற்றம் அமைய வேண்டும் என்றார் பண்ருட்டி ராமச்சந்திரன்.
இருப்பினும் அதிமுக மேடையில் ஏறி அக்கட்சிக்காக பிரசாரம் செய்வாரா அல்லது தனியாக பிரசாரம் செய்வாரா என்பது குறித்து பண்ருட்டியார் விளக்கவில்லை.












Click it and Unblock the Notifications