இரட்டை இலை சின்னத்துடன் நாளை வேட்புமனு தாக்கல் செய்வேன்... தினகரன் உற்சாகம்
இரட்டை இலை சின்னத்தில் நாளை வேட்புமனு தாக்கல் செய்வேன் என்று ஆர்.கே. நகர் சசிகலா அணி வேட்பாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.
சென்னை: இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் எங்களுக்கே ஒதுக்கும் என்பதால் ஆர்.கே.நகர் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் நாளை வேட்புமனுதாக்கல் செய்யவுள்ளேன் என்று டிடிவி தினகரன் தெ்ரிவித்தார்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் 6 முனை போட்டிகள் நிலவி வருகின்றன. மக்களின் ஆதரவு யாருக்கு என்பதை தீர்மானிக்கும் தேர்தலாக இது பார்க்கப்படுகிறது.
இதில் சசிகலா அணி சார்பில் தினகரனும், ஓபிஎஸ் அணி சார்பில் மதுசூதனனும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்கிற பஞ்சாயத்து நடைபெற்று வருவதால் இவர்கள் இருவரும் இன்னும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
தேர்தல் ஆணையத்தில் முறையீடு
உண்மையான அதிமுக தாங்களே என்றும் இரட்டை இலை சின்னம் தங்களுக்கே என்றும் சசிகலா தரப்பும், ஓபிஎஸ் தரப்பும் டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையரிடம் தெரிவித்துள்ளன. இதுதொடர்பான முடிவு இன்றோ அல்லது நாளையோ அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
ஜெ.சமாதியில் தினகரன்
இந்நிலையில் ஜெயலலிதாவின் சமாதியில் ஆசி பெற டிடிவி தினகரன் வந்தார்.அப்போது செய்தியாளர்களிடையே அவர் கூறுகையில், உண்மையான அதிமுகவாகிய எங்களுக்கே அச்சின்னம் ஒதுக்கப்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
வேட்புமனு தாக்கல்
ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் நாளை வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாளாகும். எனவே இரட்டை இலை சின்னத்துடன் நாளை வேட்புமனு தாக்கல் செய்வேன் என்றார் அவர். அவருடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, பெஞ்சமின், சரோஜா, நிலோபர் கபில் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.