நான் 'கேப்டனை' விட்டுப் போகவே மாட்டேன்.. திருப்பரங்குன்றம் ஏ.கே.டி. ராஜா

தேமுதிக எம்.எல்.ஏக்களில் 7 பேர் ஏற்கெனவே அதிமுகவுக்கு ஆதரவாக மாறி விட்டனர். அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் அரசியலை விட்டே போய் விட்டார். எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்து விட்டார்.
இதனால் தேமுதிக எதிர்க்கட்சி அந்தஸ்தை இழக்கிறது. இந்த நிலையில், மேலும் 3 எம்.எல்.ஏக்கள் அதிமுகவுக்கு ஆதரவாக வரப் போவதாக ஒரு பரபரப்புச் செய்தி கிளம்பியுள்ளது. காரணம், இந்த மூன்று பேரும் தேமுதிக செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பதால்.
இவர்களில் திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ ஏ.கே.டி. ராஜா இந்த செய்தியை திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,
இதுபோன்ற தகவல்களை ஏற்கனவே பலமுறை பரப்பியுள்ளனர். சென்னையில் நடந்த தே.மு. தி.க. செயற்குழு கூட்டத்தில் நான் கலந்து கொண்டேன். தலைவர் விஜயகாந்தின் மகன் திரைப்பட தொடக்க விழாவிலும் கலந்து கொண்டுள்ளேன்.
நான் ஆரம்ப காலத்தில் இருந்தே தலைவரின் ரசிகன். நான் எந்த சூழ்நிலையிலும் விஜயகாந்தைவிட்டு பிரிய மாட்டேன். தே.மு.தி.க.வில் இருந்து விலகி விடுவேன் என்றும், அ.தி.மு.க. பக்கம் சென்றுவிடுவேன் என்றும் வேண்டுமென்றே சிலர் பொய்யான தகவல்களை பரப்பி எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி வருகிறார்கள். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்றார் ராஜா.












Click it and Unblock the Notifications