மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை- இல்லாவிட்டால் ராஜினாமா: அமைச்சர் உதயகுமார் மிரட்டல்!
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்காவிட்டால் பதவியை ராஜினாமா செய்துவிடுவேன் என அமைச்சர் ஆர்பி உதயக்குமார் எச்சரித்துள்ளார்.
மதுரை: தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்காவிட்டால் பதவியை ராஜினாமா செய்துவிடுவேன் என அமைச்சர் ஆர்பி உதயக்குமார் மிரட்டியுள்ளார். இதனால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கூடுதல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
அமைச்சர் ஆர்பி உதயக்குமார் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தோப்பூர் கிராமத்தில் புதிய எய்ம்ஸ் அதிநவீன சிறப்பு மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி அமைக்க முதல்வரிடம் வலியுறுத்தியுள்ளதாக கூறினார்.
இதற்காக தோப்பூர் கிராமத்தில் 200 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் தேர்வு செய்யப்பட்டு மாவட்ட கலெக்டர் மூலம் அரசுக்கு முன்மொழிவுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
எளிதாக வரலாம்
தென் தமிழகத்தினுடைய மைய பகுதியில் 12 மாவட்டங்களான மதுரை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, கரூர், தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு அருகில் உள்ளதாக அவர் தெரிவித்தார்.
முதல்வரிடம் கடிதம்
மேலும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து எளிதில் வந்து சேரும் வண்ணம் விரிவான போக்குவரத்து வசதிகளும் அமையப் பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார். இதன்காரணமாக மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட வேண்டிய அத்தியாவசியம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கடிதம் கொடுத்துள்ளதாகவும் அமைச்சர் உதயக்குமார் தெரிவித்தார்.
ராஜினாமா செய்வேன்
இந்நிலையில் தமிழக அரசு தஞ்சையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்குமாறு பரிந்துரைத்துள்ளது என்று கூறிய அவர், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியுடன் இருப்பதாக கூறினார். இதற்காக பதவியை தியாகம் செய்யவும் தயங்க மாட்டேன் என்றும் அவர் எச்சரித்தார்.
எடப்பாடிக்கு நெருக்கடி
ஏற்கனவே பெரும்பான்மையை இழந்ததாக கூறப்படும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசுக்கு அமைச்சர் உதயக்குமாரின் ராஜினாமா மிரட்டல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. தங்கள் பகுதியில் தான் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என மதுரை மக்கள் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.