ஜெ. மரணம் திவாகரனின் திடுக் தகவல்... அறிவிப்பை தள்ளிப் போட்டது யார்?
ஜெயலலிதா டிசம்பர் 4ம் தேதி மாலை 5.15 மணிக்கே உயிரிழந்துவிட்டதாக சசிகலாவின் சகோதரர் திவாகரன் திடுக் தகவலை வெளியிட்டுள்ளார். அப்படியானால் இந்த அறிவிப்பை தள்ளிப் போட்டது யார் என்ற கேள்வி எழுகிறது.
Recommended Video
சென்னை : ஜெயலலிதா டிசம்பர் 4ம் தேதி மாலை 5.15 மணிக்கே உயிரிழந்துவிட்டதாக சசிகலாவின் சகோதரர் திவாகரன் தெரிவித்துள்ளார். ஆனால் ஓராண்டுக்குப் பிறகு திவாகரன் ஏன் இந்த தகவலை தெரிவிக்கிறார் என்ற கேள்வி ஒருபுறம் இருந்தாலும் அறிவிப்பை தள்ளிப்போட யார் அனுமதி அளித்தது என்று பல்வேறு கேள்விகளை திவாகரனின் இந்த திடுக் தகவல் ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதா மரணமடைந்து சரியாக 407 நாட்கள் ஆகின்றன. ஆனால் அவர் மரணத்தில் இருக்கும் சந்தேகம் என்பது மட்டும் முற்றுபெறாமல் புதுப்புது மர்ம முடிச்சுகள் விழுந்து கொண்டு தான் இருக்கின்றன. ஜெயலலிதா உயிரிழந்தவிட்டதாக டிசம்பர் 5ம் தேதி அப்பலோ நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்நிலையில் திருவாரூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சசிகலாவின் சகோதரர் திவாகரன், ஜெயலலிதா ஆபத்தான நிலையில் இருக்கும் செய்தியறிந்து நான் அப்பலோ மருத்துவமனைக்கு சென்றேன். டிசம்பர் 4ம் தேதிமாலை 5.15 மணிக்கே ஜெயலலிதா இறந்துவிட்டார், ஆனால் வெறும் மெஷின்களை வைத்து அவரை வைத்திருந்தனர்.
அப்பல்லோ கேட்ட உத்தரவாதம்
அப்போதே ஏன் இப்படி இறந்தவரை மெஷின் பாதுகாப்பில் வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, தமிழகம் முழுவதும் இருக்கும் அப்பலோ மருத்துவமனைகளுக்கு பாதுகாப்பு அளித்தால் மட்டுமே மரணத்தை அறிவிக்க முடியும் என்று அப்பலோ கூறியதாக திவாகரன் பேசியுள்ளார்.
தொடக்கம் முதலே பிசகு
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதே ஆபத்தான நிலையில் தான் அனுமதிக்கப்பட்டார். ஆனால் மக்கள் பீதியடைந்துவிடுவார்கள் என்பதால் காய்ச்சல், நீர்ச்சத்து குறைபாடு என்று கூற அறிவுறுத்தப்பட்டதாக அப்பலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி கடந்த மாதத்தில் கூறி இருந்தார்.
ஏன் அவகாசம் கொடுக்கப்பட்டது?
இந்நிலையில் ஜெயலலிதா மரணத்தை அறிவிக்காமல் வைத்திருந்தது அப்பலோ தான் என்று சசிகலாவின் சகோதரர் திவாகரன். ஒரு வேளை ஜெயலலிதா முன்கூட்டியே இறந்திருந்தால் 24 மணி நேரம் அவகாசம் எடுத்துக் கொண்டது ஏன், இதற்கான அனுமதி சசிகலாவிற்கு தெரியாமல் தரப்பட்டிருக்கும் என்று பல்வேறு கேள்விகள் எழுகின்றன.
திவாகரன் சொல்வது உண்மையா?
ஆனால் மருத்துவ ரீதியில் இதனை பார்க்க வேண்டும் என்கின்றனர் வல்லுநர்கள். டிசம்பர் 4ம் தேதியே ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டு இதய செயல்பாடு நின்றாலும், அதனை மீண்டும் துடிக்கச் செய்யத் தான் கருவிகள் பொருத்தப்பட்டிருக்கலாம் என்று கூறுகின்றனர். டிசம்பர் 4ம் தேதியே இதய துடிப்பு நின்றாலும், அதனை மீண்டும் துடிக்கச் செய்யும் வரை மூளையின் செயல்பாடு எந்த அளவில் இருந்தது என்பதற்கான மருத்துவ ஆதாரத்தை பார்க்க வேண்டும். அதைப் பார்த்தால் மட்டுமே திவாகரன் கூறுவதில் எந்த அளவிற்கு உண்மை இருக்கிறது என்பதை கண்டறிய முடியும் என்கின்றனர் மருத்துவத் துறையினர்.