சசிகலா முதல்வரானால்.. தமிழக அரசியலில் அடுத்து இந்த பிரளயங்கள்தான் நடக்கும்!
அதிமுகவில் தற்போதுள்ள கொந்தளிப்பு, மக்களிடம் சசிகலாவுக்கு எதிராக உள்ள மனநிலை போன்றவற்றையெல்லாம் வைத்து பார்த்தால், இனி தமிழக அரசியல் எப்படி போகப்போகிறது தெரியுமா?
சென்னை: நாளை அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கு அழைப்புவிடுத்துள்ளார் அக்கட்சி பொதுச்செயலாளர் சசிகலா. உள்ளங்கை நெல்லிக் கனியை போல, இந்த கூட்டம் எதற்காக என்பது பெருவாரியான மக்களுக்கும் புரிந்தே உள்ளது.
பன்னீர்செல்வத்தை முதல்வர் பதவியிலிருந்து கீழிறங்க சொல்லிவிட்டு, அந்த சீட்டை பிடிக்க சசிகலா நடத்தும் நகர்வே இந்த எம்.எல்.ஏக்கள் கூட்டத்தின் நோக்கம் என்கிறார்கள் மூத்த பத்திரிகையாளர்களும், அரசியல் நோக்கர்களும்.
நாளை நடைபெறும் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் சசிகலாவை சட்டசபை கட்சி தலைவராக தேர்ந்தெடுத்தால், அடுத்த சில நாட்களிலேயே முதல்வராக மகுடம் சூட்டப்போவதை யாராலும் தடுக்க முடியாது.
அரசியல் களம்
இப்படி ஒரு நிகழ்வு நடைபெற்றால், அதன்பிறகு தமிழக அரசியல் களம் எப்படி மாறும் என்பதை யூகித்து பார்த்தாலே தலை சுற்றுகிறது. சசிகலா முதல்வரானால் பிறகு என்ன நடைபெறும் என்பதை அரசியல் நோக்கர்கள் கணிக்காமல் இல்லை. அதிமுகவில் தற்போதுள்ள கொந்தளிப்பு, மக்களிடம் சசிகலாவுக்கு எதிராக உள்ள மனநிலை போன்றவற்றையெல்லாம் வைத்து பார்த்தால், இனி தமிழக அரசியல் எப்படி போகப்போகிறது தெரியுமா?
பெண்களின் எதிர்ப்பு
சசிகலா முதல்வராக பதவியேற்றால், அதிமுக கட்சி உடைவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அடிமட்ட நிர்வாகிகள் பலரும் கட்சி மாற வாய்ப்புள்ளது. அதிலும், குறிப்பாக இளம் பெண்கள் பாசறை உட்பட எங்கெல்லாம் பெண்கள் நெட்வொர்க் பலமாக உள்ளதோ அவையெல்லாம் உடையும். ஏனெனில் ஜெயலலிதா மீது கண்மூடித்தனமாக பாசம் வைத்திருந்த பெண்களை கொண்டு கட்டமைக்கப்பட்டதுதான் அதிமுக. அந்த பெண்களே ஜெயலலிதாவுக்கு எதிரானவராக சசிகலாவை பார்ப்பதால், கட்சியின் அடிப்படை பலமே உருக்குலையும்.
அதிருப்தியாளர்கள் கோஷ்டி கானம்
முதல்வராக பொறுப்பேற்கும்போது எதிர்ப்பு இருக்க கூடாது என நினைக்கும் சசிகலா, தனது எதிர்ப்பாளர்களுக்கு திடீரென பதவிகளை ஒதுக்கியுள்ளார். அதிமுகவின் புதிய அமைப்புச் செயலாளர்களாக கே.ஏ. செங்கோட்டையன், சைதை துரைசாமி, கோகுல இந்திரா, கருப்பசாமி பாண்டியன், சோமசுந்தரம், வரகூர் அருணாசலம், நரசிம்மன், நிறைகுளத்தான். அன்பழகன் அண்ணாமலை, உமாதேவன், புத்திசந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதிமுக மீனவர் பிரிவு செயலராக அமைச்சர் ஜெயக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன், அதிமுக கொள்கை பரப்பு துணை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் இப்படி பத்தோடு பதினொன்றாக இருக்கும் ஒரு பதவி தங்களுக்கு வேண்டாம் என்பதே செங்கோட்டையன் உள்ளிட்டோரின் கருத்தாக உள்ளதாம். எனவே அதிருப்தியாளர்கள் அதிமுகவிலிருந்து பிரிந்து செல்ல வாய்ப்பு ஏற்படும்.
திமுகவின் வியூகம்
அதிமுகவிலிருந்து உடைந்து வரும் அல்லது கோபத்தில் இருக்கும் எம்.எல்.ஏ.களைக் கொண்டு ஆட்சி அமைக்க திமுக தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா மூலம் அதிருப்தியாளர்களை ஈர்த்து பிறகு, திமுக ஆட்சியமைக்க நடவடிக்கைகளில் இறங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள். கட்சித் தாவல் காரணமாக, இப்போது ஆட்சி கலைந்து பொதுத்தேர்தல் நடந்தால் அது அதிமுகவுக்கு எதிரானதாகவே அமையும் என்பது கள நிலவரம். எனவே இப்படி நடந்தால், திமுகவுக்கு பெரும் லாபம் என்கிறார்கள்.
பன்னீர் செல்வம் பாஜக பக்கம்
இன்னொரு தகவல்தான் பகீர் ரகம். முதல்வர் பதவியிலிருந்து கீழிறங்க சொல்லி சசிகலா தரப்பு நெருக்கடி கொடுப்பதால் கோபத்திலுள்ள பன்னீர்செல்வத்தை பாஜக வளைக்கும் முயற்சி நடக்கிறதாம். தற்போது தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக உள்ளார் பன்னீர்செல்வம். அவருக்கு சசிகலாவைவிட மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு உள்ளது. எனவே அவரை பாஜக பக்கம் இழுத்து அவரையே முதல்வர் வேட்பாளராக நிறுத்தி தேர்தலை சந்திக்கும் அளவுக்கு பாஜகவின் காய் நகர்த்தல்கள் ஆரம்பித்துவிட்டனவாம்.
அரசியல் மாற்றம்
பொதுவான ஒரு ஆதரவை தாண்டி, தமிழகத்தின் தென் பகுதியில் ஜாதிய அடிப்படையிலும் பன்னீர்செல்வத்திற்கு, அதிக செல்வாக்கு இருப்பதால் அதை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று பாஜக கணக்கு போடுகிறது. எனவேதான் கடந்த சில நாட்களாகவே பன்னீர்செல்வத்தை, ஆஹா, ஓஹோவென புகழ்ந்து தலைப்பு செய்திகளாக வெளியிட ஆரம்பித்துள்ளன பாஜக ஆதரவு நாளிதழ்கள் என்கிறார் ஒரு மூத்த பத்திரிகையாளர். இப்படி பல்வேறு பெரும் அரசியல் மாற்றங்களுக்கு வித்திடப்போகும் நாள்தான் பிப்ரவரி 5 என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.