80% வாக்குப் பதிவு நடந்தால் நானே ராஜா.. தினகரன் அபார நம்பிக்கை!
ஆர்.கே.நகரில் 80சதவீதம் வாக்குகள் பதிவானால் குக்கர் சின்னம் கண்டிப்பாக அமோக வெற்றிபெறும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: ஆர்.கே.நகரில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், தனது ஆதரவாளர்களுடன் தினகரன் சில வாக்குச்சாவடிகளுக்கு சென்று பார்வையிட்டார்.
வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியாக பணியாற்றுகிறதா என்று வாக்களித்து வந்தவர்களிடம் அவர் கேட்டு தெரிந்துக்கொண்டார். அப்போது அவர் தனது சின்னம் அமோகமாக வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொகுதி முழுவதும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருவதாக கூறினார். 80 சதவீதம் வாக்குப்பதிவானால் இயற்கையின் துணையுடன் கண்டிப்பாக குக்கர் சின்னம் வெற்றி பெறும். மக்களும் மாற்றத்தை விரும்புவதால், தேர்தலின் முடிவை தொடர்ந்து மிகப்பெரிய அளவு அரசியல் மாற்றம் ஏற்படும்.
பணத்தை நம்பி நிற்காமல், மக்களின் மனதையும், நலனையும் கருத்தில் கொண்டு நிற்பதால் குக்கர் சின்னம் அமோகமாக வெற்றி பெற்று, பெரும் அரசியல் மாற்றத்திற்கு வழிவகுக்கும் என்றும் தினகரன் தெரிவித்தார்.