பாத்துப் படிக்கவே இப்படித் தடுமாறும் இவர் நமக்கு முதல்வரானால்..!
சென்னை: எத்தனைதான் வேண்டாம் என்று விட்டு விட நினைத்தாலும் கூட விஜயகாந்த்தின் ஒவ்வொரு செயலையும் பார்க்கப் பார்க்க அப்படி ஒரு ஆதங்கம் பொங்கிக் கொண்டு வருகிறது. இப்படிப்பட்ட ஒருவர்தான் நமக்கு முதல்வராக வர வேண்டும் என்று ஏன் இந்த மக்கள் நலக் கூட்டணியும், தேமுதிகவும், தமாகாவும் மக்களிடம் வாய் வலிக்க வலிக்க வலியுறுத்தி வருகின்றன என்று கோபமும் கூடவே கிளம்பி வருகிறது.
எந்த வகையிலும் விஜயகாந்த்தை முதல்வராக நியாயப்படுத்த முடியாத அளவுக்கு அவரது ஒவ்வொரு செய்கையும் உள்ளது.
இப்போதைய விஜயகாந்த் நிச்சயம் முதல்வர் பதவிக்கு தகுதியானவர் என்று யாராவது கூறினால் நிச்சயம் அவரையும் சேர்த்துத்தான் நாம் சந்தேகப்பட்டாக வேண்டும்.
சுய லாபத்திற்காக
நிச்சயம் இவர் மீது எந்தத் தப்பும் இருக்க முடியாது. ஆனால் சுயநலத்திற்காக, பதவிக்கு எப்படியாவது வந்து விட வேண்டும் என்ற வெறியுடன் இருக்கும் கூட்டணித் தலைவர்களின் சுயநல வெறிக்காக விஜயகாந்த்தை ஒரு ஷோகேஸ் பொம்மை போல ஒவ்வொரு ஊராகக் கூட்டிக் கொண்டு போய் நிற்க வைத்து வருகிறார்கள்.
நியாயப்படுத்தி பேசும் பிரேமலதா
விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா கூட தனது கணவரைப் பார்த்து ஊரே சிரிக்கிறதே என்ற நெருடல் இல்லாமல் அவரும் சேர்ந்து விஜயகாந்த்தின் செயலை நியாயப்படுத்திப் பேசி வருவதுதான் பெரிய கொடுமை.
விவாதத்துக்குரியவை
திருச்சியில் நேற்று நடந்த மாநாட்டில் விஜயகாந்த் நடந்து கொண்ட விதம், பேசிய விதம், செய்த செயல்கள் நிச்சயம் விவாதத்துக்குரியவை. இதை அவர் தனது வீட்டுக்குள் செய்திருந்தால் யாரும் கேள்வி கேட்க முடியாது.
என்ன பேச்சு இது?
ஆனால் பொது இடத்தில் லட்சக்கணக்கணக்கானோர் முன்னிலையில் அவர் செய்ததால் அவரது ஒவ்வொரு செய்கையும் நிச்சயம் விவாதத்துக்குரியவை. இதற்கு விளக்கம் தர வேண்டியது அவரை கூட்டி வந்து அங்கே பேச வைத்தவர்களுக்கு உண்டு.
கடைசி நேரத்தில் பேச விட்டு
விஜயகாந்த் நேற்றைய கூட்டத்தில் பேச வந்தபோது நேரம் பத்து மணியை நெருங்கியிருந்தது. அதாவது நெருக்கியடித்து, டைமே இல்லையே என்று கூறும் நிலையில்தான் விஜயகாந்த்தைப் பேசவே அனுமதித்தனர் கூட்டணியினர்.
மைக்கை விடாத வைகோ
வைகோ மைக்கைப் பிடித்தவர் வெறி பிடித்தவர் போல பேசிக் கொண்டே இருந்தார். நிறுத்தவில்லை, விடவில்லை. மைக்குக்கு மட்டும் வாயிருந்தால் வைகோ வாயைக் கடிச்சிருக்கும். அப்படி ஒரு பேச்சு, பேச்சு, பெரிய பேச்சு.
சம்பந்தா சம்பந்தமே இல்லாமல் பேசிய விஜயகாந்த்
ஒரு வழியாக மைக்கை விட்டு வைகோ வாயை எடுத்த பின்னர் விஜயகாந்த்தைப் பேச கூப்பிட்டனர். அவரும் வந்தார். வழக்கம் போல தட்டுத் தடுமாறு சம்பந்தா சம்பந்தமே இல்லாமல் பேசத் தொடங்கினார். நிறையப் பேசினார். ஆனால் என்ன பேசினார் என்பதை யாராலும் கோர்வையாக பொருத்திப் பார்க்கவே முடியாது.
10 நிமிடத்திற்கு முன்பே முடிஞ்சு போச்சு
வழக்கம் போல டைமாகிப் போச்சு, நேரமாச்சு என்று கூறி விட்டு 10 நிமிடத்திற்கு முன்பாகவே பேச்சை முடித்தார் விஜயகாந்த். இவர் பத்திரமாக போய்ச் சேர வேண்டுமே வீட்டுக்கு என்று எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கும்போதே, மக்களே எலலாரும் பத்திரமாக வீடு போய்ச் சேர வேண்டும் என்று அந்த டென்ஷனிலும் கூட அட்வைஸ் கூற விஜயகாந்த் தவறவில்லை.
அதற்கு மேல் முடியலை
விஜயகாந்த்தைக் கடைசி நேரத்தில்தான் பேச வைக்கிறார்கள் என்றாலும் கூட சாலிடாக அவருக்கு 20 நிமிடம் வரை கிடைக்கிறது. ஆனால் அவரோ திருவிழாவில் காணாமல் போனவர் மாதிரி தட்டுத் தடுமாறி பத்து நிமிடத்திலேயே முடித்து விடுகிறார். அதற்கு மேல் பேச அவராலும் முடியவில்லை.
ஷேல் என்றால் என்னண்ணே!
நேற்று பேசும்போது திடீரென ஷேல் கேஸ் குறித்துப் பேச ஆரம்பித்தார். ஆனால் ஷேல் என்றால் என்ன என்று அவருக்குத் தெரியவில்லை. திரும்பி வைகோவைப் பார்த்து விளக்கம் கேட்க ஆரம்பித்து விட்டார். அவரது வாயைப் பார்த்து உட்கார்ந்திருந்த கூட்டம், அப்படியே தேமே என்று அவரையே பார்த்துக் கொண்டிருந்தது.
படிக்க முடியலை
அதை விட முக்கியமாக கடைசி நேரத்தில் தனது கட்சியின் தேர்தல் அறிக்கை குறித்த பாயிண்டுகளைச் சொல்ல அதைப் படிக்க ஆரம்பித்தார். ஆனால் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் கூட்டிக் கூட்டிப் படிப்பது போல படித்தார் விஜயகாந்த். ஒரு கட்டத்தில் அதைக் கூட அவரால் தொடர முடியவில்லை. என்னமோ எழுதியிருக்கு என்றவரிடம், பின்னாலிலிருந்து போதும் கேப்டன் முடிங்க என்று குரல் வரவே ஆகவே மக்களே எல்லோரும் பத்திரமாக போய்ட்டு வாங்க என்று கும்பிடு போட்டு பேச்சை நிறுத்திக் கொண்டார்.
என்னாகும் மக்கள் நிலை
கிட்டத்தட்ட 3 மணி நேரம் நடந்த ஒரு கூட்டத்தில் பாதியில் வருகிறார் முதல்வர் வேட்பாளரான விஜயகாந்த். அதிலும் அவரை கடைசியில்தான் பேச விடுகிறார்கள். கிடைத்த நேரத்தையும் கூட அவரால் முழுமையாகப் பயன்படுத்த முடியவில்லை. பேப்பரைப் பார்த்துக் கூட படிக்க முடியவில்லை. இவர் இந்த நாட்டின் முதல்வரானால் என்னாகும் நமது நிலை என்று நினைக்கவே பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது.