கள்ளக்குறிச்சி எஸ்பி சஸ்பெண்ட்.. கலெக்டர் பணியிட மாற்றம்.. உயரும் கள்ளச்சாராய பலியால் அரசு அதிரடி
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 9 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 50 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை என்பது அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இத்தகைய சூழலில் தான் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் எஸ்பி சமய்சிங் மீனா, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் அதிகாரிகள் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாகுளம் அருகே கள்ளச்சாராயம் குடித்தவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். சுமார் 50க்கும் அதிகமானவர்கள் திடீரென்று வாந்தி, வயிற்றெரிச்சல் உள்ளிட்ட பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து அவர்களை குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் தான் கள்ளச்சாராயம் குடித்ததில் 9 பேர் வரை பலியாகி உள்ளனர். மேலும் 5க்கும் அதிகமானவர்களின் நிலைமை மோசமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இத்தகைய சூழலில் தான் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதை உறுதி செய்யும் வகையில் அமைச்சர்கள் மா சுப்பிரமணியன் மற்றும் எவ வேலு ஆகியோர் கள்ளக்குறிச்சிக்கு விரைந்துள்ளனர்.
இத்தகைய சூழலில் தான் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஷ்ரவன் குமாருக்கு பதிலாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியராக எம்எஸ் பிரசாந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் கள்ளக்குறிச்சி எஸ்பி சமய்சிங் மீனா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கள்ளச்சாராயம் விற்பனையை தடுக்க தவறியதாக கூறி அவர் மீது இந்த நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது. அதோடு சமய் சிங் மீனாவுக்கு பதிலாக புதிய எஸ்பியாக ரஜத் சதுர்வேதி நியமிக்கப்பட்டுள்ளார். இதுதவிர மதுவிலக்கு அமலாக்க பிரிவு அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி மதுவிலக்கு அமலாக்க பிரிவை சேர்ந்த காவல் துணை கண்காணிப்பாளர் தமிழ் செல்வன், கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் கவிதா, திருக்கோவிலூர் மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் பாண்டிச்செல்வி, உதவி காவல் ஆய்வாளர் பராதி மற்றும் அப்பகுதி காவல் நிலை ஆய்வாளர் ஆனந்தன், உதவி காவல் ஆய்வாளர் ஷிவ்சந்திரன், காவல் நிலைய எழுத்தர் பாஸ்கரன், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மனோஜ் உள்ளிட்டவர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications