ராஜஸ்தானில் சோமனூர் வியாபாரிகளை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் : ஈஸ்வரன்
ராஜஸ்தானில் சோமனூர் வியாபாரிகளை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
சென்னை : பணம் தராமல் ஏமாற்றிய வியாபாரிகளைச் சந்திக்க சென்ற சோமனூர் வியாபாரிகளை, ராஜஸ்தானில் வைத்து தாக்கிய சம்பவம் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கோடிக்கணக்கில் துணி பெற்றுக்கொண்டு பணம் தராமல் ஏமாற்றிய வியாபாரியைச் சந்திக்க சோமனூரில் இருந்து ராஜஸ்தான் சென்ற 3 வியாபாரிகள் தாக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
வியாபாரிகள் ஏமாற்றம்
மேலும் அந்த அறிக்கையில், சோமனூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் சுப்பிரமணியம், பழனிசாமி மற்றும் நடராஜ் ஆகிய மூன்று பேரிடமும் கோடிக்கணக்கில் துணியை பெற்றுக்கொண்டு அதற்கான பணத்தை தராமல் மூன்று ஆண்டுகளாக ஏமாற்றிய ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த வீரோத்ரா கெளதமை அவருடைய சொந்த ஊரில் சந்திக்க கடந்த 22ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று சென்றிருந்தனர். வீட்டில் வீரோத்ரா கெளதம் இருந்து கொண்டே அவரது தாயார் மூலமாக இல்லை என்று சொல்ல வைத்து சோமனூர் ஜவுளி உற்பத்தியாளர்களை திருப்பி அனுப்பினார்கள்.
துப்பாக்கி முனையில் கொள்ளை
அதன் பின்னர் ஊருக்கு திரும்பி வருவதற்காக அகமதாபாத்தை நோக்கி காரில் சென்று கொண்டிருந்த மூன்று பேரையும் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் வீரோத்ரா கெளதம் மற்றும் அவரது அடியாட்கள் தூப்பாக்கி முனையில் கண்மூடித்தனமாக தாக்கி இருக்கின்றனர். மூன்று பேரும் பயந்து கொண்டு கைகால்கள் உடைப்பட்டு ஊருக்கு திரும்பி இருக்கிறார்கள். திரும்பி வந்து கொண்டிருந்தவர்களை தாக்கியது ராஜஸ்தான் மாநிலத்தோடு வியாபாரம் தொடர்புள்ள அனைவருக்கும் எச்சரிக்கை விடுத்ததாகவே பார்க்கப்படுகிறது.
பாதுகாப்பு இல்லை
எந்தவொரு தமிழனுக்கும் வேறு மாநிலங்களில் பாதுகாப்பு இல்லை என்பதைத்தான் இந்த சம்பவம் மீண்டும் நிரூபித்திருக்கிறது. இதே ராஜஸ்தான் மாநிலத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருடனை விரட்டிச்சென்ற போது சுடப்பட்ட நிகழ்வும் நடந்ததென்பது கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் நடக்கின்ற திருட்டு, கொள்ளை மற்றும் வியாபார ஏமாற்று உள்ளிட்ட அத்தனைக்கும் ராஜஸ்தான்காரர்கள்தான் அதிக காரணமாக இருக்கிறார்கள். ராஜஸ்தான் குற்றவாளிகளின் பிறப்பிடமாக இருக்கிறது என்பதை இதிலிருந்து புரிந்துக்கொள்ள முடிகிறது.
கவனம் தேவை
தமிழகத்தில் இருக்கின்ற ராஜஸ்தான்காரர்களிடம் வியாபாரம் செய்யும்போது கவனத்தோடு தமிழக வியாபாரிகள் செய்ய வேண்டும். திருடிவிட்டோ, ஏமாற்றிவிட்டோ ராஜஸ்தானுக்கு ஓடிவிட்டால் நம்மால் இழந்த பணத்தை திரும்ப பெறவே முடியாத நிலை உருவாகியிருக்கிறது. தமிழகத்தில் இருக்கின்ற அத்தனை ராஜஸ்தான்காரர்களும் வெட்கப்பட வேண்டிய விஷயம் இது.
உதவி செய்ய வேண்டும்
சோமனூர் ஜவுளி வியாபாரிகளை தாக்கிய ராஜஸ்தான் மாநில வீரோத்ரா கெளதமையும், அவரது அடியாட்களையும் தமிழக காவல்துறை உடனடியாக கைது செய்து தமிழகத்திற்கு கொண்டுவர வேண்டும். தமிழகத்தில் இருக்கின்ற ராஜஸ்தான் மாநில மக்கள் சங்கத்தை சார்ந்தவர்கள் இதுபோன்ற சமயங்களில் தமிழக வியாபாரிகளுக்கு உதவ முன்வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.