சென்னை அண்ணாசாலையில் மீண்டும் திடீர் விரிசல்... வாகன ஓட்டிகள் பீதி
சென்னை அண்ணாசாலையில் மீண்டும் திடீர் விரிசல் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் பீதியடைந்துள்ளனர்.
சென்னை: சென்னை அண்ணாசாலையில் மீண்டும் திடீர் விரிசல் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் பீதியடைந்துள்ளனர். இந்த விரிசல் காரணமாக அவ்வழியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு மாற்று பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மெட்ரோ சுரங்கப்பாதை பணிகள் நடைபெறும் சென்னை அண்ணாசாலையில் நேற்று முன்தினம் பிற்பகல் திடீரென பெரும் பள்ளம் ஏற்பட்டது. இதில் மாநகர பேருந்து ஒன்றும் கார் ஒன்றும் சிக்சிக்கொண்டது.
இந்த பள்ளத்தை சீரமைக்கும் பணிகள் நேற்று தான் முடிவடைந்தது. இந்நிலையில் அதேபகுதியில் ஜெமினி மேம்பாலம் நுழைவு வாயில் அருகே இன்று மீண்டும் திடீர் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பெரும் பீதியடைந்தனர். சென்னையின் முக்கிய சாலை மற்றும் காலை நேரம் என்பதால் அப்பகுதியில் ஏராளமான வாகனங்கள் சென்று கொண்டிருந்தன.
இந்த திடீர் விரிசல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவ்வழியாக செல்லும் வாகனங்கள் கடற்கரை சாலையில் மாற்றிவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இருப்பினும் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
விரிசல் ஏற்பட்ட பகுதியில் மாநகர காவல்துறையினர், மெட்ரோ சுரங்கப்பாதை ஊழியர்கள் பார்வையிட்டு வருகின்றனர்.பொதுமக்கள் யாரும் விரிசல் ஏற்பட்ட பகுதியில் செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.