பயங்கர சூறாவளியில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள வாழை மரங்கள் சேதம்....
கோபிசெட்டிபாளையம்: ஈரோடு மாவட்டம், நம்பியூரில், பலத்த சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையில் 22 ஏக்கரில் வாழை மரங்கள் சேதமடைந்தன.
நம்பியூர், செட்டிபாளையம் பகுதியில் சூறாவளியுடன் பெய்த பலத்த மழையால், இன்னும் ஒரு மாதத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த வாழைத் தார்கள், குலையுடன் முறிந்து மண்ணில் சாய்ந்தன.
இப்பகுதியில், 40 லட்சம் ரூபாய் மதிப்பில், 22 ஏக்கர் பரப்பில் இருந்த வாழை மரங்கள் நாசமானதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதனிடையே 48 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை கேரளாவை தாக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
வழக்கமாக தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் 1-ந்தேதி தொடங்கும். ஆனால், 4-ந்தேதி ஆன பின்னும் இன்னும் தென்மேற்கு பருவமழை தொடங்கவில்லை. இதனால் இந்த வருடம் தென்மேற்கு பருவமழை பொய்க்குமா என்ற சந்தேகம் நிலவியது.
இந்நிலையில் இன்னும் 48 மணி நேரத்தில் கேரளாவில் தென்மேற்கு பருவ மழை பெய்யத் தொடங்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தற்போது தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு அருகே ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை இன்று மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும், இதனால் கேரளாவில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.
மேலும், தென்கிழக்கு அரபிக் கடலில் மேல்மட்டத்தில் காற்று வீசுவது தொடர்ந்து நீடித்தால் இன்னும் 48 மணி நேரத்தில் கேரளாவில் கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications