புதுச்சேரி பேருந்து நிலையத்தில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!
விநாயகர் சதுர்த்திக்காக சொந்த ஊருக்குச் சென்ற மக்கள் நாளை வேலைக்குத் திரும்ப வேண்டும் என்பதால் புதுச்சேரி பேருந்துநிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
புதுச்சேரி: மூன்று நாட்கள் விடுமுறையை முடித்து அனைவரும் ஒரே நேரத்தில் சென்னைக்குத் திரும்புவதால் புதுச்சேரி பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை விநாயகர் சதுர்த்திக்கு விடுமுறை என்பதாலும் அடுத்து சனி, ஞாயிறு வார இறுதி என்பதாலும் சென்னையில் பணிபுரியும் பலர் தங்கள் சொந்த ஊருக்கு சென்றனர்.
ஊருக்கு சென்று விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடியவர்கள் இன்று சென்னைக்குத் திரும்புவதால் புதுச்சேரி பேருந்து நிலையம் பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. மேலும், போக்குவரத்துதுறை முன்கூட்டியே திட்டமிட்டு நிறைய பேருந்துகளை விடாததால் பயணிகள் பேருந்து கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
தற்போது மாலை நேரத்தில் மழை பெய்வதால் பயனிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். இதேபோல், கடலூர், சிதம்பரம் பேருந்து நிலையத்திலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. நாளை பணிக்குத் திரும்ப வேண்டும் என்கிற காரணத்தால் பலர் பேருந்துகளில் நின்றுகொண்டே பல மணிநேரம் பயணம் செய்து வருகின்றனர்.
இனி, அடுத்தடுத்து பண்டிகைகள் வர இருப்பதால் முன்கூட்டியே போக்குவரத்துறை பயணிகள் நலன் கருதி திட்டமிட்டு நிறைய பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.