ஆர்கே நகர் இடைத்தேர்தலில் எந்த சின்னத்தில் போட்டியிடுவார் டிடிவி தினகரன்?
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் எந்த சின்னத்தில் போட்டியிடுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை: ஆர்கே நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் எந்த சின்னத்தில் போட்டியிடுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இரட்டை இலைச் சின்னத்தை மதுசூதனன் அணிக்கு ஒதுக்கி தேர்தல் ஆணையம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இனி இரட்டை இலைச் சின்னத்தையும் அஇஅதிமுக என்ற பெயரையும் மதுசூதனன் அணியினர் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இது தினகரன் தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாக தினகரன் தரப்பு தெரிவித்துள்ளது.
சசிகலாவுக்கு பின்னடைவு
ஏற்கனவே ஜெயலலிதா மரணத்தில் சசிகலா குடும்பத்தினர் மீது மக்களுக்கு சந்தேகம் உள்ளது. இந்நிலையில் இரட்டை இலை சின்னமும் கட்சியும் நழுவியிருப்பது சசிகலா தரப்புக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
போட்டியிடவுள்ள டிடிவி
இந்நிலையில் ஆர்கே நகர் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. ஆர்கே நகர் இடைத்தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன் என அறிவித்துள்ளார் டிடிவி தினகரன்.
எந்த சின்னத்தில் போட்டியிடுவார்?
இரட்டை இலைச்சின்னம் ஈபிஎஸ் ஓபிஎஸ் தரப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் டிடிவி தினகரன் எந்த சின்னத்தில் போட்டியிடுவார் என்று கேள்வி எழுந்துள்ளது. தேர்தல் ஆணைய தீர்ப்பை எதிர்த்து தினகரன் உச்சநீதிமன்றத்துக்கு போனாலும் டிசம்பர் மாதத்துக்குள் சாதமாக முடிவு கிடைக்கும் என்பது சாத்தியமில்லை.
தொப்பி சின்னம் ஒதுக்கப்பட்டது
ஆகையால் தினகரன் சுயேட்சை வேட்பாளரைப் போல் ஏதாவது ஒரு சின்னத்தில் தான் போட்டியிட முடியும். கடந்த முறை ஆர்கே நகர் இடைத்தேர்தலின் போது அதிமுக கட்சியும் சின்னமும் முடக்கப்பட்டு டிடிவி தினகரனுக்கு தொப்பி சின்னம் ஒதுக்கப்பட்டது.
இரட்டை மின்விளக்கு சின்னமா?
இந்நிலையில் மீண்டும் டிடிவி தினகரன் தொப்பி சின்னத்தில் போட்டியிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அல்லது ஓபிஎஸ் அணிக்கு ஒதுக்கப்பட்ட, பார்ப்பதற்கு இரட்டை இலை போன்று தோன்றிய இரட்டை மின்விளக்கு சின்னத்தில் போட்டியிடுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.