விடுதலைப் புலிகள் மீதான தடையை இந்தியாவும் நீக்க திருமாவளவன் வலியுறுத்தல்- வீடியோ
சென்னை: ஐரோப்பிய ஒன்றியத்தின் நீதிமன்றம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்கியது போல் இந்தியாவும் நீக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் நீதிமன்றம் பயங்கரவாத இயக்கங்கள் பட்டியலில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை நீக்கி தீர்ப்பளித்துள்ளது ஈழத்தமிழர்களுக்கு மட்டுமில்லாது உலகின் எல்லா இடங்களிலும் வாழும் தமிழர்களுக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.

இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறியதாவது:
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் நீக்கியுள்ளது. இது உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கக் கூடியது. ஐரோப்பிய ஒன்றியத்தை பின்பற்றி இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகளும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி கோரிக்கை விடுக்கிறது.
விடுதலை புலிகள் இயக்கம் ஒரு வெகுமக்கள் இயக்கம்; தேசிய இன விடுதலை இயக்கம். ஆனால், அதை அல்கொய்தா போன்ற பயங்கரவாத இயக்கங்கோடு சேர்த்து தடை விதித்து ஒரு பின்னடைவை ஏற்படுத்திவிட்டார்கள்.
அமெரிக்க ஆதரவு நாடுகள் பயங்கரவாத இயக்கங்களுக்கு எதிராக பல நாடுகளை ஒருங்கிணைத்த போது, அமெரிக்கா அதனை விடுதலை புலிகள் பக்கமும் திருப்பிவிட்டது. அதனால் தான் இவ்வளவு பெரிய பின்னடைவு ஒரு விடுதலை போராட்டத்துக்கு உண்டானது என்பதை அனைவரும் அறிவர்.
தமிழ்ச் சமூகம் ஒரு நல்ல எதிர்காலத்தை நோக்கி நகர்கிறது என்பதற்கான வழியாக ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தின் நடவடிக்கையை பார்க்கிறேன். இந்தியாவும் இந்த நடவடிக்கையை பின்பற்ற வேண்டும். மேலும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் விடுதலை புலிகள் இயக்கத்துக்கு எதிராக விதித்துள்ள தடையை நீக்க வேண்டும் என மீண்டும் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு தொல். திருமாவளவன் கூறினார்.












Click it and Unblock the Notifications