ஐ.பி.எஸ் அதிகாரியாவதே லட்சியம்: எஸ்.ஐ. திருநங்கை பிரித்திகா யாசினி
சேலம்: இந்தியாவில் முதன்முதலாக சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு தேர்வான திருநங்கை பிரித்திகா யாசினிக்கு நேற்று பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. ஐ.பி.எஸ்., அதிகாரியாகி, பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதையே லட்சியமாக கொண்டு, போலீஸ் துறையில் செயல்படுவேன் என்று அவர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலமாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வு நடந்தது. இத்தேர்வில் தேர்ச்சி பெற்ற, சேலம் மாநகரத்தை சேர்ந்த திருநங்கை பிரித்திகா யாசினி உள்பட 21 பேருக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இவர்களுக்கான பணி நியமன ஆணைகளை மாநகர போலீஸ் கமிஷனர் சுமித்சரண் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் துணை கமிஷனர் செல்வராஜ் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். நேற்று பணி நியமன ஆணை பெற்ற பிரித்திகா யாசினிக்கு, போலீஸ் கமிஷனர் சுமித்சரண் உள்பட உயர் அதிகாரிகள் சிறப்பாக பணியாற்ற வாழ்த்து தெரிவித்தனர். பணி நியமன ஆணை பெற்றவர்களுக்கான பயிற்சி, வண்டலூர் அருகே உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் வரும் 26ம் தேதி முதல் தொடங்க உள்ளது.
பணி நியமன ஆணை பெற்ற மகிழ்ச்சியில் இருக்கிறார் திருநங்கை பிரித்திகா யாசினி, அதே மகிழ்ச்சியுடன் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவில் முதன் முதலாக காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த பணியில் சிறப்பாக பணியாற்றி, திருநங்கையாலும் சாதிக்க முடியும் என்பதை நிரூபிப்பேன் என்றார்.
திருநங்கைகள் மற்றும் பெண்கள் மீதான கொடுமைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பணி செய்வேன். அத்துடன் பெண் சிசு கொலையை தடுக்க என்னால் ஆன முயற்சியை மேற்கொள்வேன். மேலும் பணியில் இருந்து கொண்டே படித்து ஐ.பி.எஸ்.அதிகாரி ஆவதே எனது லட்சியம். சட்டம்- ஒழுங்கை காப்பாற்ற தீவிரமாக பணியாற்றி திருநங்கை சமுதாயத்திற்கு பெருமை சேர்ப்பேன் என்றும் அவர் கூறினார்.
சேலம் கந்தம்பட்டியை சேர்ந்த கனகராஜ், சுமதி தம்பதியரின் மகள் திருநங்கையான பிரித்திகா யாசினி நீண்ட சட்ட போராட்டத்திற்குப் பிறகு இந்த பணியைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.