அப்போ கையில் வைத்த 'மை' எல்லாம் பொய்யா? ஆர்.கே. நகரில் அரங்கேறிய கூத்து...
சென்னை: ஓட்டு போட போனமா? கரண்ட் கட் ஆச்சா? மை வச்சாங்க.. ஓட்டு போட்டுட்டு வர்றதுக்குள்ள மை அழிஞ்சு போச்சே என்பதுதான் ஆர்.கே. நகர் தொகுதி வாக்காளர்களின் அதிர்ச்சியாக இருந்தது. முன்பெல்லாம் ஓட்டு பெட்டியை மாற்றுவார்கள். இப்போதோ மை டப்பாவை மாற்றி டெக்னிக் செய்திருக்கின்றனர் அரசியல்வாதிகள்.
பெரிதும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட சட்டசபை தேர்தல் எந்த வித அசம்பாவித சம்பவங்களும் இன்றி அமைதியான முறையில் நேற்று நடந்து முடிந்துள்ளது. ஒருவழியாக தேர்தல் முடிந்து விட்டது என்று நிம்மதி பெருமூச்சு விட்டாலும் எதிர்கட்சியினர் ஏகத்திற்கும் ராஜேஷ் லக்கானியை வறுத்தெடுக்கின்றனர்.
முதல்வர் ஜெயலலிதா போட்டியிடும் சென்னை ஆர்கேநகர் தொகுதியில் வாக்காளர்கள் கையில் வைக்கப்படும் 'மை' டப்பா மாற்றப்பட்ட சம்பவம்தான் இப்போது பெரிதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதாவை எதிர்த்து திமுக சார்பில் சிம்லா முத்துசோழனும், மக்கள் நலக்கூட்டணி சார்பில் விடுதலை சிறுத்தை கட்சியின் வசந்திதேவியும் போட்டியிடுகின்றனர்.

வாக்குப்பதிவு
ஜெயலலிதா போட்டியிடும் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. புதிய வாக்காளர்கள், முதியோர்கள் என அனைத்து தரப்பினரும் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்து சென்றனர்.

கட் ஆன கரண்ட்
காலை 11.10 மணி முதல் 11.45 மணி வரை ஆர்.கே.நகர் பகுதியில் திடீரென மின்சாரம் தடைபட்டது. இதனால் சில வாக்குச்சாவடிகளில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்றது. சிறிது நேரத்தில் கரண்ட் வரவே வாக்காளர்களின் கைகளில் வைக்கப்படும் மையில் வித்தியாசம் தென்பட்டது.

மை டப்பா மாறிய மர்மம்
எண்ணூர் நெடுஞ்சாலையில் உள்ள இ.சி.ஐ. மெட்ரிகுலேசன் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்திலும் மின்சாரம் இல்லை. அந்த சமயத்தில் வாக்குச்சாவடிக்குள் மர்மநபர்கள் புகுந்து வாக்காளர்களுக்கு வாக்களித்ததற்கு அடையாளமாக வைக்கப்படும் அழியாத மை டப்பாவை மாற்றி, அதற்கு பதிலாக போலியான மை டப்பாவை வைத்ததாக திடீரென தகவல் பரவியது.

மை டப்பாவை மாற்ற போராட்டம்
வாக்குச்சாவடிக்குள் இருந்த விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த முகவர்கள் போலி மை டப்பாவை மாற்றிவிட்டு, புதிய மை டப்பாவ வைக்கவேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தகவல் காட்டுத்தீப் போல பரவவே, அங்கே வந்த தே.மு.தி.க., மக்கள் நல கூட்டணி, த.மா.கா.வை சேர்ந்த நிர்வாகிகளும் அங்கு திரண்டு வந்தனர். அவர்களும் மை பாட்டில்களை மாற்றவேண்டும் என்று கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

வாக்குப்பதிவு தடை
இதையடுத்து தேர்தல் அதிகாரிகள் விரைந்து வந்து அங்கிருந்த மை பாட்டில்களை பரிசோதனை செய்தனர் இந்த சம்பவத்தால் வாக்குப்பதிவு சுமார் 30 நிமிடம் தடைபட்டது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், அக்கட்சியின் முகவர் பாரிவேந்தன், தலைமை தேர்தல் அதிகாரி, ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் அதிகாரி ஆகியோரிடம் மனு அளித்துள்ளார்.

உண்மையான மை
வாக்குச்சாவடியில் சுமார் 20 நிமிடம் மின்சாரம் தடைபட்டது. வாக்குச்சாவடியில் போலியான மை பயன்படுத்தப்படுவதாக புகார் மனு கொடுக்கப்பட்டது. அந்த மை உண்மையானதுதான் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் நிரூபித்த பின்னர் வாக்குப்பதிவு சுமுகமாக நடைபெற்றது என்று விளக்கம் அளித்துள்ளார் ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி பத்மஜா தேவி

மறு வாக்குப்பதிவு
மின்சாரம் துண்டிக்கப்பட்ட உடன் வாக்குச்சாவடியில் எளிதில் அழியும் மை வைக்கப்பட்டுள்ளது. இதனை சோதனை செய்துவிட்டு போலியான மை என்று அதிகாரிகள் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகவே இந்த வாக்குச்சாவடியில் மட்டும் மறுவாக்குப்பதிவு நடத்தவேண்டும் என்கிறார் ஆர்.கே.நகர் தொகுதியில் விசிக வேட்பாளர் வசந்தி தேவி.

மை விசயத்திற்கு விசாரணை
அதிகாரிகளுக்கு தெரியாமல் இப்படி தரமற்ற 'மை' வர வாய்ப்பில்லை. கள்ள ஓட்டு போடுவதற்காக இப்படி ஈடுபடுகிறார்கள்" என்று குற்றம்சாட்டினர்.
இதனிடையே, இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மை மாற்றப்பட்டதாக புகார் வந்துள்ளது இது குறித்து விசாரிக்கப்படும் என்று கூறியுள்ளார் ராஜேஷ் லக்கானி.

கரண்ட் போனது ஏன்?
அத்திப்பட்டில் ஏற்பட்ட மின்சார பழுது காரணமாக வடசென்னையில் உள்ள ஆர்.கே.நகர், ராயபுரம், பெரம்பூர், திரு.வி.க.நகர், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலையில் திடீரென மின்சாரம் தடைபட்டது. அந்த பகுதிகளில் உள்ள சில வாக்குச்சாவடிகளிலும் மின் இணைப்பு சிறிது நேரம் தடைபட்டது என்கின்றனர் மின்வாரிய அதிகாரிகள்.
குழம்பும் வாக்காளர்கள்
ஆர்.கே. நகர் வாக்காளர்களோ-.. மழை வந்துச்சு... அப்புறம் கட் ஆச்சு... ஓட்டு போடப் போனோம்... மை வச்சாங்க... ஆனா விரல்ல இல்லையே? என்னாச்சு? என்று கேட்கின்றனர். தேர்தல் ஆணையம் இதற்கு என்ன விளக்கம் அளிக்கப் போகிறதோ? மறு வாக்குப்பதிவு நடந்தால் ஆர்.கே. நகர் தொகுதி வாக்காளர்களுக்கு ஜாக்பாட்தான்.












Click it and Unblock the Notifications