இருளர் பழங்குடியினர்! 6 மாதத்தில் 6442 பாம்புகளை பிடித்த இருளர் சங்கம்.. விஷம் எடுக்கும் பணி தீவிரம்
செங்கல்பட்டு: வடநெம்மேலியில் உள்ள பாம்பு பண்ணையை, சுற்றுலா பயணிகள் பார்க்க அனுமதிக்கப்படுகிறார்கள்.. தற்போது பொங்கல் தொடர் விடுமுறையில் இங்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இந்நிலையில், பாம்புகளிடமிருந்து விஷம் எடுக்கும் பணிகள் துரிதமாக துவங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இருளர் பழங்குடியின மக்கள் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் வசித்து வருகிறார்கள். இவர்களின் வாழ்வாதாரம், வேட்டையாடுவது, பாம்பு பிடிப்பது, மீன் பிடிப்பது போன்ற தொழில்களை செய்து வருகிறார்கள்..

இருளர்கள்: குறிப்பாக, யார் வீட்டிலாவது பாம்பு நுழைந்துவிட்டால், தங்களுக்கு கிடைக்கும் தகவலின் அடிப்படையில் விரைந்து சென்று, அந்த பாம்பை லாவகமாக பிடித்துவிடுவார்கள். இருளர் பழங்குடியினர், பாம்புகளை எப்படி பிடிப்பார்கள் என்பதை, "ஜெய்பீம்" படத்தில் காட்டியிருப்பார்கள்.
பாம்புகளை பிடித்து வரும் இருளர் மக்களின் வாழ்வாதாரம் மேம்படுவதற்காக, மாமல்லபுரம் அடுத்துள்ள வட நெம்மேலி பகுதியில் ஈசிஆர் சாலையையொட்டி, இருளர் பாம்பு பிடிப்போர் தொழில் கூட்டுறவு சங்கம் பல வருடங்களாகவே செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு கட்டுப்பாட்டின் கீழ் இந்த சங்கம் செயல்படுகிறது. இந்த சங்கத்தில் செங்கல்பட்டு, சென்னை திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களை சேர்ந்த 350க்கும் மேற்பட்ட உறுப்பினர்களாக உள்ளனர்..
பெருங்களத்தூர்: குறிப்பாக பழையபெருங்களத்தூர், சென்னேரி, புதுப்பெருங்களத்தூர் மாம்பாக்கம், காயார், வெம்பேடு ஆகிய பகுதிகளில் உள்ள வனப்பகுதிகளில் இருந்து விஷப்பாம்புகளை பிடித்து வரும், இருளர் பழங்குடியின மக்கள் அந்த பாம்புகளை நெம்மேலி பகுதியில் உள்ள பாம்பு பண்ணையில் வழங்கி விஷம் எடுத்து, பிறகு மீண்டும் அந்தந்த வனப்பகுதிகளில் அவற்றை விடுவதை தொழிலாக மேற்கொண்டு வருகின்றனர்.
நல்ல பாம்பு, கண்ணாடி விரியன், கட்டு விரியன், சுருட்டை விரியன் உள்ளிட்ட பாம்பு வகைகளை பிடித்து, சங்கத்திடம் ஒப்படைப்பார்கள். இருளர்கள் பிடிக்கும் பாம்புக்கு ஏற்றவாறு பணமும் கொடுக்கப்படுகிறது. இவர்கள் பிடித்து தரும் பாம்புகளை, ஒரு மண்பானையில் பாதுகாப்பாக அடைத்து வைத்து, பிறகு ஒவ்வொரு பாம்பாக வெளியே எடுத்து விஷம் எடுக்கப்படுகிறது.
தயாரிப்பு நிறுவனங்கள்: இந்த விஷமானது, இந்தியாவிலுள்ள பல்வேறு மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கு விற்கப்படுகிறது. பாம்பு விஷம் கேட்கும் மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு பார்சல் மூலமாக அனுப்பப்படுகிறது.
இந்த ஆண்டு 13 ஆயிரம் பாம்புகள் பிடிக்க அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இதையடுத்து கடந்த 6 மாதங்களில் மட்டும், 1130 கட்டுவிரியன், 5043 சுருட்டை விரியன், கண்ணாடி விரியன் 149, நல்ல பாம்பு 120 என மொத்தம் 6 ஆயிரத்து 442 பாம்புகள் பிடிக்கப்பட்டிருப்பதாக தகவல வெளியாகியிருக்கிறது..
பானைகள்: இதையடுத்து, இந்த பாம்புகளிடம் விஷம் எடுக்கும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. தற்போது குளிர் காலம் என்பதால் குளிரை தாக்கு பிடிக்க, பாம்புகள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பானைகளை சுற்றி வைக்கோல் வைக்கப்பட்டு, பாம்புகளுக்கு சூடு ஏற்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்களாம்.












Click it and Unblock the Notifications