அதிமுக வரலாறு திரும்புகிறது... இந்த வாக்கெடுப்பு வெ(செ)ல்லுமா?
எடப்பாடி பழனிச்சாமி அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பு 1988ல் ஜானகி எம்ஜிஆர் வாக்கெடுப்பு கோரியது போலவே உள்ளது. இது சட்டப்படி செல்லுமா என்பது பெரும் கேள்வியாக உள்ளது.
சென்னை: தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டு எடப்பாடி பழனிச்சாமி அணியினர் அதில் 122 வாக்குகள் பெற்று வெற்றிபெற்று இருக்கின்றனர். அதிமுக இரண்டு அணிகளாக பிளவுபடுவதும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுவதும் இது முதல்முறையல்ல.
1987ஆம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் தேதி அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் உடல்நலம் பாதிக்கப்பட்டு, சிகிச்சை எடுத்துக்கொண்டும் அது பலனளிக்காமல் இறந்துவிடுகிறார். அப்போதும் அதிமுகவுக்குள் இப்போது போல் இரண்டு அணிகள் உருவாயின.

ஜானகி அணி
அப்போது எம்ஜிஆரின் நம்பிக்கைக்கும் அன்புக்கும் பாத்திரமானவர்களாக இருந்த ஆர்.எம். வீரப்பன், எஸ்.டி.சோமசுந்தரம் உள்ளிட்ட சீனியர் தலைவர்களுக்கு ஜெயலலிதா தங்களை மீறி கட்சியில் வளர்வதா என்ற எண்ணமும் பகைமையும் இருந்தது. அதனால் அவர்கள் ஒன்றிணைந்து எம்ஜிஆரின் மனைவி ஜானகி அம்மையாரை ஆதரித்தனர். அதன் மூலம் ஜானகி அணி வலுவானது.

ஜெயலலிதா அணி
இப்போது தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருக்கும் திருநாவுக்கரசர், தற்போது திமுகவில் இயங்கும் கே.கே.எஸ்.எஸ் ராமச்சந்திரன், சேலம் கண்ணன் போன்றவர்கள் ஒருங்கிணைந்து அப்போது அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராகவும் ராஜ்யசபா எம்.பியாகவும் இருந்த ஜெயலலிதாவை ஆதரிக்க ஜெ. அணி வலுவானது.

தமிழகத்தின் முதல் பெண் முதல்வரான ஜானகி அம்மையார்
நேற்று பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் எடப்பாடி பழனிச்சாமிக்கு முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைத்தது போல, அப்போது ஜானகி அம்மையாருக்கு ஆளுநராக இருந்த அலெக்ஸாண்டர் ஜனவரி 7 ஆம் தேதி, 1988ஆம் ஆண்டு முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைத்தார். அப்போதும் ஆளுநர் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் உத்தரவிட்டார். ஜானகி அம்மையார் தமிழகத்தின் முதல் பெண் முதல்வர் என்ற பெருமையைப் பெற்றார்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்குகொள்ளாத திமுக
அப்போது சட்டசபை சபாநாயகராக பி.எச்.பாண்டியன் இருந்தார். அவர் இன்று தனபால் நடத்தியதைப் போலவே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினார். ஆனால் அப்போது திமுக, ஜனகி அணி, ஜெயலலிதா அணி என யாருக்கு ஆதரவு அளிக்கவில்லை. ஆர்.எம் வீரப்பன் கருணாநிதியிடம் நேரில் சென்று கேட்டும் அவர் உரிய பதிலைத் தரவில்லை.

கலவரத்தில் வெற்றி பெற்ற ஜானகி அணி
சட்டமன்றத்தில் வாக்கெடுப்பு நடந்தது. ஜானகி அணியினரும் ஜெ. அணியினரும் சட்டசபைக்குள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். பல சட்டசபை உறுப்பினர்களின் வேட்டிகள் உருவப்பட்டு, சட்டைகள் கிழிக்கப்பட்டன. காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. இத்தனை களேபரம் நடந்துகொண்டிருந்தபோதும், சபாநாயகராக இருந்த பி.எச்.பாண்டியன், இன்றைய சபாநாயகர் தனபால் சொன்னதைப் போல, எப்படி வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் சபாநயகருக்கே உள்ளது என்று கூறினார். நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினார்.

வெற்றி செல்லாது... அமலான கவர்னர் ஆட்சி
ஜானகி அணி பெரும்பான்மையை நிரூபித்து வெற்றி பெற்றது என சபாநாயகர் அறிவித்தார். ஜனகி அனியினரும் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், சட்டசபை கலவர பூமியாகி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டிருப்பதால், இது செல்லாது என்று கூறி, அப்போதைய மத்திய அரசு 1988ஆம் ஆண்டு, ஜனவரி 30 தேதி ஆட்சியைக் கலைத்தது. ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்தது.
அதன்பிறகு நடத்தப்படட் தேர்தலில் திமுக வென்றது. ஜானகி அனி வெறும் 2 சீட்டுகளையே பெற்றது. ஜெயலலிதா அணி 27 சட்ட உறுப்பினர்களைப் பெற்றது.

இன்றைய நம்பிக்கை வாக்கெடுப்பு வெற்றி செல்லுமா?
இன்றும் பெருத்த கலவரத்துக்கு இடையில்தான் இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி 122 சட்டமன்ற உறுபினர்களின் ஆதரவைப் பெற்று வாக்கெடுப்பில் வென்றுள்ளார். ஆனால், இது வெற்றி சட்டபூர்வமாக செல்லுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications