ஒரே கூத்தா இருக்கு.. ரஜினி ஆங்கில அறிவும், சு.சாமி, பொன்.ராதாகிருஷ்ணன் அரசியல் அறிவும்!
சென்னை: ரஜினிக்கு ஆங்கிலம் தெரியும் என சுப்பிரமணியன் சுவாமிக்கு பதிலடி கொடுத்துள்ளார் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.
ரஜினி படிப்பறிவு இல்லாதவர், ஆங்கிலம் பேசத் தெரியாது, எனவே அவர் அரசியலுக்கு தகுதியில்லாதவர் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இந்த முத்தான கருத்துக்கு முரட்டுத்தனமாக பதிலடி கொடுத்துள்ளார் பொன்.ராதாகிருஷ்ணன்.

ரஜினிக்கு சர்டிபிகேட்
நெல்லை மாவட்டம் வள்ளியூரில் செய்தியாளர்களை சந்தித்த பொன். ராதாகிருஷ்ணன், ரஜினிகாந்த் நன்கு படித்தவர் என்றும், சிறந்த முறையில் ஆங்கிலம் பேசக்கூடியவர் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் பொதுவாழ்க்கைக்கு ஏற்றவர் எனவும் சர்டிபிகேட் கொடுத்துள்ளார்.

ஆரோக்கிய தளம்
ரஜினி ஈழம் முதல், காவிரி, முல்லை பெரியாறு வரை எதற்காவது ரஜினி வாய்ஸ் கொடுத்தாரா? பணமதிப்பிழப்பு நேரத்தில் மோடிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததோடு கடமையை முடித்துக்கொண்டவர்தானே, அரசியலுக்கு வர ரஜினிக்கு தகுதியுள்ளதா? என்ற கொள்கை சார்ந்த அடிப்படையில் ஒரு பக்கம் வாதம் நடந்து வருகிறது.

கூத்துதான்
ஆனால், ஆங்கிலம் தெரியாததால் அறிவாளி இல்லை என்று ஒருவரும், ஆங்கிலம் தெரியும், அதனால் அவர் அறிவாளி என்று இன்னொருவரும் கூறிக்கொண்டிருக்கும் கூத்து பாஜகவிற்குள் நடந்து வருகிறது.

இரு கோஷ்டிகள்
இதில் இன்னொரு கூத்து என்னவென்றால், பாஜகவிற்குள்ளே இரு கோஷ்டிகள் செயல்படுவது அம்பலமாகிக்கொண்டிருப்பதுதான். ரஜினியை தொடர்ந்து கரித்துக் கொட்டிக்கொண்டுள்ளார் சு.சாமி. சசிகலாதான் தமிழகத்தை காக்க வந்த கடவுள் போல ஒரு பிம்பத்தை அவர் கட்டமைக்கிறார். மறுபக்கம் ஒட்டுமொத்த தமிழக பாஜக நிர்வாகிகளும், தலைவர்களும், ரஜினிதான் தமிழகத்தை காக்க வந்த இறைதூதர் என்பதை போல அடித்துவிட்டு வருகிறார்கள்.

அறிவுக்கு தேவையா
ஆங்கிலம் என்பது ஒரு மொழி மட்டுமே. ஆங்கிலம் தெரியாதவர்கள் மாபெரும் அறிவாளிகளாக இருந்துள்ளனர், இருக்கிறார்கள். தமிழக முதல்வராக இருந்த காமராஜர் அதற்கு தலை சிறந்த உதாரணம். ஆனால் ஆங்கிலத்தை வைத்துக்கொண்டு இரு சீனியர் பாஜக நிர்வாகிகள் தங்களுக்குள் தர்க்கம் நடத்திக்கொண்டிருப்பதை பார்த்து பொதுமக்கள் சிரிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications