ஜெயலலிதா ஸ்ரீரங்கத்திற்கு மட்டும் தான் முதல்வரா அல்லது 234 தொகுதிகளுக்குமா?: விஜயகாந்த்
சென்னை: ஜெயலலிதா செய்வதை எல்லாம் பார்க்கையில் அவர் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு மட்டும் தான் முத்லவரோ என்ற சந்தேகம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழக முதல்வர் ஜெயலலிதா, சில தினங்களுக்கு முன்பு அவருடைய ஸ்ரீரங்கம் தொகுதிக்கு சென்று பல்வேறு அரசு நலத்திட்டங்களை வழங்கினார். அதில் அவர் பேசும்போது, ஸ்ரீரங்கம் தொகுதிக்கு 5வது முறையாக வருவதாகவும், இதுவரை இத்தொகுதிக்கு 2185 கோடியே 71 லட்சம் ரூபாய் மதிப்பில் 5200 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு உள்ளதாகவும், 193 கோடியே 14 லட்சத்து 97 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டப்பணிகளை துவக்கி வைத்துள்ளதாகவும் சொல்லியுள்ளார்.
இதை பார்க்கும்போது, இவர் இந்த ஒரு தொகுதிக்கு மட்டும் முதல்வரா? அல்லது 234 தொகுதிகளுக்கும் முதல்வரா என்கின்ற ஐயம் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஓட்டு போட்டாலும், போடாவிட்டாலும் அனைவருக்கும் நீங்கள் தான் முதல்வர். அப்படி இருக்கும்போது, அனைத்து தொகுதியிலும் இதுபோன்று மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த வேண்டும். முதல்வரின் தொகுதிக்கு செய்வதைப் போல, ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் தொகுதிகளுக்கு கூட செய்யப்படுவதில்லை. ஆளும் கட்சி தொகுதியே இப்படியென்றால், எதிர்க்கட்சிகளின் தொகுதிகளை பற்றி சொல்லவே தேவையில்லை.
தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் குடிநீர் பற்றாக்குறை, சுகாதார வசதியின்மை, மின்வெட்டு என மக்கள் அவதிப்பட்டு கொண்டுள்ளனர். இதையெல்லாம் காது கொடுத்து கேட்காமல், சுயநலத்துடன் செயல்படும் முதல்வராகத் தான் ஜெயலலிதா இருக்கிறார். இந்த போக்கை அவர் மாற்றிக் கொண்டு, ஒரு தாய் எப்படி எல்லா குழந்தைகளையும் சரி சமமாக நடத்துகிறாரோ, குறும்புக்கார குழந்தையாக இருந்தாலும் எப்படி அன்பு காட்டுகிறாரோ, அதுபோல தமிழகத்தின் அனைத்து சட்டமன்ற தொகுதிகளையும் முதல்வரின் தொகுதியாக பாவித்து அங்குள்ளவர்களுக்கும் மக்கள் நலத்திட்டங்கள் சிறப்பாக சென்றடைந்திடும் வகையில் முதல்வரின் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என அவர் அதில் தெரிவித்துள்ளார்.