பெண்களுக்கு கட்டாய சன்னியாசமா? ஹைகோர்ட் உத்தரவையடுத்து ஈஷா மையத்தில் நீதிபதி நேரில் ஆய்வு!
சென்னை: ஈஷா யோகா மையத்தில் தனது 2 மகள்களை, ஜக்கி வாசுதேவ் கட்டாயப்படுத்தி அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக, அப்பெண்களின் தாயார் சத்யவதி, சென்னை ஹைகோர்ட்டில், ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இம்மனுவை விசாரித்த ஹைகோர்ட், சம்மந்தப்பட்ட பெண்களிடம் மாவட்ட நீதிபதி விசாரணை நடத்த உத்தரவிட்டதையடுத்து நீதிபதி நேரில் விசாரணை நடத்தினார்.
கோவை அருகே, வெள்ளியங்கிரி பகுதியிலுள்ள, ஈஷா யோகா மையத்தில், கீதா மற்றும் லதா ஆகிய சகோதரிகள் தங்கியிருந்து யோகம் பயின்றனர். ஒரு கட்டத்தில், அவர்கள் மொட்டையடித்து சன்னியாசியாக மாறினர்.
இதனால் அதிர்ச்சியடைந்த சகோதரிகளின் தந்தை, காமராஜ், மாவட்ட காவல்துறையிடம் இதுகுறித்து புகார் அளித்தார். தனது மகள்களை கட்டாயப்படுத்தி யோகா மையத்தில் தங்க வைத்துள்ளனர் என்றும், ஈஷா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் புகார் அளித்தார்.
எஸ்பி விசாரணை
இதையடுத்து மாவட்ட எஸ்பி, ரம்யா பாரதி, இரு பெண்களிடமும் தனது அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினார். அப்போது, தாங்கள் விரும்பியே சன்னியாசியம் பூண்டதாக அந்த பெண்கள் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் ஈஷா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆட்கொணர்வு மனு
இந்நிலையில், கீதா மற்றும் லதா ஆகியோரின் தாயார், சத்தியவதி, சென்னை ஹைகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அதில், தனது மகள்கள் ஈஷாவில் கட்டாயப்படுத்தி தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை சந்திக்க, பேசுவதற்கெல்லாம், பெற்றோருக்கு அனுமதி கிடைக்கவில்லை என்றும், தங்களது புகார் மீது காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், அதில் சத்யவதி குறிப்பிட்டிருந்தார்.
விசாரணை
இந்த மனு மீதான விசாரணை, ஹைகோர்ட் நீதிபதிகள், நாகமுத்து மற்றும் பாரதிதாசன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் மீது இன்று விசாரணைக்கு வந்தது. அரசு சார்பில் ஆஜரான வக்கீல் ராஜேந்திரனிடம், புகார் பற்றி நீதிபதிகள் கேட்டபோது, கோவை காவல்துறையிடமிருந்து ஈஷா பற்றி தவறான எந்த தகவலும், அரசுக்கு வரவில்லை என கூறினார்.
நீதிமன்றம் தலையிடாது
நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறுகையில், லதா, கீதா ஆகியோர் தாங்களே விருப்பப்பட்டு கூட சன்னியாசிகளாக மாறியிருக்கலாம். ஒருவேளை அப்படி விரும்பி சன்னியாசம் பூண்டிருந்தால், அதில் நீதிமன்றம் தலையிட முடியாது.
நீதிபதி விசாரணை
இரு பெண்களும் கட்டாயப்படுத்தி சன்னியாசிகளாக்கப்பட்டிருந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும். இதை உறுதி செய்துகொள்ள, கோவை மாவட்ட நீதிபதி, அந்த இரு பெண்களிடமும் நேரடியாக விசாரணை நடத்த வேண்டும்.
இன்றே விசாரணை
இன்று (புதன்கிழமை), மதியம் 3 மணியளவில், கீதா, லதா ஆகிய இரு பெண்களிடமும், கோவை மாவட்ட நீதிபதி நேரில் விசாரணை நடத்தி, அவர்களின் கருத்தை கேட்டறிய வேண்டும். அப்போது நீதிபதிக்கு காவல்துறை உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டும்.
நாளை அறிக்கை
இரு பெண்களிடமும் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையை, நாளை ஹைகோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும். தங்களது மகள்கள் மட்டுமின்றி வேறு, பல ஆண்களும், பெண்களும் கட்டாயப்படுத்தி ஈஷாவில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் கூறியுள்ளார். அப்படியிருப்பின், அதுதொடர்பாக என்னென்ன புகார்கள், சம்மந்தப்பட்ட ஆலந்தூர் காவல் நிலையத்திற்கு வந்துள்ளதோ, அது அத்தனையையும், ஆலந்தூர் இன்ஸ்பெக்டர், நீதிபதியிடம் வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
விசாரணை
ஹைகோர்ட் உத்தரவை ஏற்று, கோவை மாவட்ட முதன்மை நீதிபதி பொங்கியப்பன் இன்று மதியம் ஈஷா யோகா மையத்திற்கு நேரில் சென்றார். அவருடன், மாவட்ட எஸ்.பி ரம்யாபாரதி, சட்ட ஆணைய நிர்வாகியும் சென்றனர். நீதிபதி வருகையை தொடர்ந்து, ஈஷா மையத்தை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஈஷா மையத்தில் லதா மற்றும் கீதா ஆகியோரிடம் நீதிபதி விசாரணை நடத்தினார். விசாரணை அறிக்கை நாளை ஹைகோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.