இலங்கை உதவியுடன் வேவுபாத்த பாக். உளவாளி ஜாகீர் உசேனுக்கு 5 ஆண்டு சிறை!!
சென்னை: தமிழகத்தை உளவு பார்த்ததாகவும், இந்திய இறையாண்மை, பொருளாதாரத்தை சீர்குலைக்கும் வகையில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டதாகவும் ஒப்புக் கொண்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளி ஜாகீர்உசேனுக்கு சென்னை பூவிருந்தவல்லி நீதிமன்றம் 5 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்துள்ளது.
பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளியான ஜாகீர்உசேனை தேசிய புலனாய்வு பிரிவு போலீசார் கடந்த ஆண்டு கைது செய்தனர். மேலும் ஜாகீரின் கூட்டாளிகளான முகமதுசலீம், சிவபாலன், ரபீக் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவர்கள் மீது கள்ளநோட்டு வழக்கும் உள்ளது. இந்தநிலையில் ஜாகீர்உசேன், சிவபாலன், முகமதுசலீம் ஆகிய 3 பேர் மீதும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இவர்கள் மீதான வழக்கு விசாரணை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது.
உளவாளிகள் 3 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிபதி மோனி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது தமிழகத்தை உளவு பார்த்ததாக குற்றவாளிகள் மீது சாட்டப்பட்டு உள்ள குற்றங்கள் குறித்து நீதிபதி மோனி கேட்டார்.
அதற்கு ஜாகீர்உசேன், தம் மீது சாட்டப்பட்டு உள்ள குற்றத்தை ஒப்புக்கொள்வதாக நீதிபதி முன்னிலையில் தெரிவித்தார். மேலும் இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் அமீர்சுபேர்சித்திக், பாஸ் என்ற ஷா மற்றும் மலேசியாவில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள் முகமதுசுலைமான், முஸ்லி ஆகியோரது வழிகாட்டுதலில் இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்படும் வகையில் ரூ.2 லட்சத்து 53ஆயிரம் கள்ளநோட்டுகளை தமிழகத்தில் புழக்கத்தில் விடுவதன் மூலம் இந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்கும் வகையில் குற்றம் என்று தெரிந்தே அதனை செய்ததாகவும், இந்திய இறையாண்மை மற்றும் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் செயல்களில் ஈடுபட்டதாகவும் நீதிபதி முன்னிலையில் ஜாகீர்உசேன் ஒப்புக்கொண்டார்.
இந்த நிலையில் இன்று இந்த வழக்கில் ஜாகீர் உசேனுக்கு 5 ஆண்டுகாலம் சிறைத் தண்டனையும் ரூ2 ஆயிரம் அபராதமும் விதித்து பூவிருந்தவல்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.